ஆந்திர சட்டசபை தேர்தலில் கலக்க ரெடியாகும் நட்சத்திரப் பட்டாளம்
ஹைதராபாத்: ஆந்திராவில் நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலில் போட்டியிட நடிகர்-நடிகைகள் தயாராகி வருகின்றனர்.
ஆந்திர சட்டசபையின் பதவிக் காலம் வரும் 2014ம் ஆண்டு முடிவடைகிறது. இதையடுத்து ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டசபை தேர்தலும் நடக்கவிருக்கிறது. சட்டசபை தேர்தலில் போட்டியிட தெலுங்கு நடிகர்- நடிகைககள் தயாராகி வருகின்றனர்.
நடிகர்கள் பாலகிருஷ்ணா, முரளி மோகன், தர்மபுரம் சுப்பிரமணியம், நடிகைகள் விஜயசாந்தி, ரோஜா, ஜெயப்பிரதா, ஜெயசுதா, பழம்பெரும் நடிகை கீதாஞ்சலி ஆகியோர் தேர்தலில் போட்டியிட உள்ளனர்.
நகரியில் ரோஜா
நகரி தொகுதியில் ஒய். எஸ்.ஆர். காங்கிரஸ் நிர்வாகியும், நடிகையுமான ரோஜா போட்டியிடுகிறார்.
ராஜமுந்திரியில் ஜெயப்பிரதா
எம்.பி. ஜெயப்பிரதா தேசிய அரசியலில் இருந்து மாநில அரசியலுக்கு வருகிறார். அவர் ராஜமுந்திரி தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளார்.
கட்சி தாவி போட்டியிடும் ஜெயசுதா
ஜெயசுதா தற்போது செகந்திராபாத் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக உள்ளார். அவர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸில் சேர்ந்து வரும் சட்டசபை தேர்தலில் போட்யிட திட்டமிட்டுள்ளார்.
பாலகிருஷ்ணா
தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வந்த பாலகிருஷ்ணா இம்முறை தேர்தலில் போட்டியிடுகிறார்.
நான் ஏன் பிரச்சாரம் செய்யணும்?
தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு தனது மகன் லோகேசை அரசியல் வாரிசாக தெரிவித்து வருவதால் ஜூனியர் என்.டி.ஆர். அதிருப்தி அடைந்துள்ளார். அதனால் அவர் இந்த தேர்தலில் பிரச்சாரம் செய்ய மாட்டார் என்று கூறப்படுகிறது.
விஜயசாந்தி
நடிகை விஜயசாந்தி தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி சார்பில் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.
தெலுங்கு தேச நட்சத்திரங்கள்
பழம்பெரும் நடிகை கீதாஞ்சலி, நடிகை கவிதா, நடிகர் முரளி மோகன் ஆகியோர் தெலுங்கு தேசம் சார்பில் போட்டியிடுகின்றனர்.
வாணிஸ்ரீ
நடிகை வாணிஸ்ரீ நெல்லூர் எம்.பி. தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். சற்றும் எதிர்பாராத விதமாக மக்கள் அவர் மீது கல்வீசித் தாக்கி விரட்டியடித்தனர். இதனால் அவர் இம்முறை பிரச்சாரம் செய்வது சந்தேகம் தான் என்று கூறப்படுகிறது.