மீண்டும் உதயநிதி ஸ்டாலின் மனைவி குரலில் பேசி பண மோசடிகள்!
உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் ரமன்லால், ரவிச்சந்திரன், மதுசூதன், கிஷோர் ஆகியோர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உதயநிதி ஸ்டாலின் மனைவி கிருத்திகா சார்பில் புகார் மனு ஒன்றை கொடுத்தனர்.
அதில் கூறியிருப்பதாவது: எங்கள் கட்சிக்காரர் கிருத்திகா உதயநிதியின் குரலில் பேசுவது போல பேசி, திமுக பிரமுகர்களிடமும், பொதுமக்களிடமும் ஒரு கும்பல் பல்வேறு பண மோசடிகளில் ஈடுபட்டது. இது தொடர்பாக கடந்த 13-6-12 அன்று போலீஸ் டி.ஜி.பியிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தோம். இது தொடர்பாக சென்னை திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
இன்பநிதி என்ற குமார் கைது...
பின்னர் இதுபோல் போலி குரலில் பேசிய நபர் இன்பநிதி என்ற குமார், தினேஷ்குமார் மற்றும் மணி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு சென்னை 13வது பெருநகர கோர்ட்டில் இப்போது விசாரணையில் உள்ளது. பின்னர் அதுபோன்ற பிரச்சனைகள் எதுவும் எனது கட்சிக்காரர் கிருத்திகா உதயநிதிக்கு இல்லை.
ஆனால், இப்போது மீண்டும் அதுபோல பிரச்சனை ஏற்பட்டுள்ளது. கிருத்திகா உதயநிதி பேசுவதுபோல போலியாக பேசி, பணம் பறிக்கும் செயலில் ஒரு கும்பல் ஈடுபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
மதுரை மாநகர் தி.மு.க. செயலாளர் தளபதியிடம்...
கடந்த 8ம் தேதி மதுரை மாநகர் திமுக செயலாளர் தளபதியிடம் பணம் வேண்டும் என்று கேட்டுள்ளனர். அதே நாளில் எஸ்.எம்.எஸ். தகவல் ஒன்றை அவருக்கு அனுப்பி, ராசிபாளையம், இந்தியன் வங்கிகிளை கணக்கில் ரூ.15,000 பணத்தை போடுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் அதே நாளில் மேற்கண்ட செல்போன் நம்பரில் இருந்து எனது கட்சிக்காரர் பேசுவது போல பேசி, எனது தம்பி வருவார், அவரிடம் பணத்தை கொடுத்து விடுங்கள் என்று கூறி இருக்கிறார்கள்.
இது போல எனது கட்சிக்காரர் கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் பெயரைச்சொல்லி, அவரது குரலில் போலியாக பேசி பணம் பறிக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளது. இது தொடர்பாக எனது கட்சிக்காரரிடம், நிறைய பேர் பேசி தகவல் தெரிவித்துள்ளனர்
மன உளைச்சலில் கிருத்திகா...
இது போன்ற சம்பவங்கள் எனது கட்சிக்காரருக்கு மிகுந்த மன உளைச்சலையும், மன வருத்தத்தையும் கொடுத்துள்ளது. அவரது நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் முயற்சியாக இது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் யார் என்று கண்டுபிடித்து சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
இவ்வாறு அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.