தமிழக மக்களுக்கு ஒரு 'ஹாட் நியூஸ்': மே 4ம் தேதி அக்னி நட்சத்திரம் துவக்கம்
இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கியதில் இருந்தே வெயில் அதிக அளவில் உள்ளது. வழக்கமாக வெயில் வேலூரில் தான் இருக்கும். ஆனால் இந்த ஆண்டோ திருச்சியும், மதுரையும் வேலூரை வெயிலில் முந்திவிட்டன. ஏற்கனவே வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் இருக்கும் மக்களுக்கு ஒரு அதிர்ச்சிகரமான செய்தி. அதாவது கோடை காலத்தில் வெயில் மிக அதிகமாக இருக்கும் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் வரும் மே மாதம் 4ம் தேதி துவங்கி 28ம் தேதி வரை நீடிக்கிறது.
25 நாட்கள் இருக்கும் அக்னி நட்சத்திர காலத்தில் முதல் 10 நாட்களை சமாளித்துவிடலாம். ஆனால் அடுத்த 10 நாட்கள் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும். கடைசி வாரத்தில் வெயிலின் தாக்கம் சற்று குறைவாக இருக்கும். அக்னி நட்சத்திர காலத்தில் சிறுவர்களும், முதியவர்களும் வெயிலில் வெளியே செல்லாமல் இருப்பது நல்லது.
சென்னையில் நேற்று வெயில் அதிகமாக இருந்தது. ஆனால் மதிய வேளைக்கு மேல் கடல்காற்று வீசத் துவங்கியது. அதனால் பிற்பகல் 3 மணிக்கு மேல் வெப்பம் சற்று தணிந்து இருந்தது. மாலையில் மெரினா கடற்கரையில் எங்கு திரும்பினாலும் மக்கள் கூட்டமாக இருந்தது.