தென் மாவட்டங்களில் கனமழை.. சூறாவளிக் காற்றில் மரங்கள் வேரோடு சாய்ந்தன
மதுரை: மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் சூறாவளிக் காற்றுடன் பெய்த கன மழையால் காரணமாக ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன. பல ஆயிரம் மதிப்பிலான வாழைமரங்கள் முறிந்து விழுந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நேற்று கன மழை பெய்தது. மழையோடு பலத்த சூறாவளிக் காற்று வீசியதால் சாலையோர மரங்கள் வேறொடு சாய்ந்து விழுந்தன. இதனால் வாகனப் போக்குவரத்து தடை பட்டது.
முத்துதேவன்பட்டியில் சூறாவளி காற்று காரணமாக பல இடங்களில் மரங்களோடு மின் கம்பங்களும் சாய்ந்து விழுந்ததால், அப்பகுதியில் மின் விநியோகம் முற்றிலும் தடைபட்டது. கூரை மற்றும் ஓட்டு வீடுகளின் மேற்கூரைகள் சூரைக்காற்றால் பெயர்த்து வீசப்பட்டன.

வாழைமரங்கள் சேதம்
இதேபோல் தேனி மாவட்டம் கோட்டூர், சீலையம்பட்டி, உள்ளிட்ட பகுதியில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் 200 மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் தார் வந்த நிலையில் இருந்த வாழை மரங்களும், 600க்கும் மேற்பட்ட தென்னை மரங்களும் அடியோடு சாய்ந்தன. இதன் மதிப்பு சுமார் 5 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். தங்களுக்கு நிவாரண உதவி அளிக்கவேண்டும் என்று அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து தோட்டகலைத்துறை அதிகாரிகள் சேத மதிப்புகளை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மழையினால் குளம், குட்டைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது, இதனால் கோடை காலங்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்பு இல்லை என்று அதிகாரிகள் கூறினர்.












Click it and Unblock the Notifications