தமிழக வறட்சி: சென்னை வந்தது மத்திய நிபுணர் குழு!
சென்னை: தமிழகத்தில் பருவ மழை பொய்த்ததால் கடும் வறட்சி நிலவுகிறது. வறட்சியால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு ரூ.20 ஆயிரம் கோடி நிவாரணம் வழங்கவேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் வறட்சி பகுதிகளை ஆய்வு செய்ய மத்திய வேளாண்மை கூடுதல் செயலாளர் பிரவேஸ் சர்மா தலைமையில் 10 பேர் கொண்ட நிபுணர் குழுவை மத்திய அரசு நியமித்து உள்ளது.
மத்திய நிபுணர் குழுவினர் 9-ந் தேதி வரை 4 நாட்கள் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு 4 குழுக்களாக பிரிந்து சென்று வறட்சி பகுதிகளில் ஆய்வு செய்ய உள்ளனர். அப்போது நீர்நிலை, குடிநீர் ஆதாரம் உள்ளிட்ட பிரச்சினைகள் பற்றியும் ஆய்வு நடத்துகிறார்கள்.
10 பேர் கொண்ட மத்திய நிபுணர் குழுவில் இடம்பெற்றுள்ள மத்திய குடிநீர்வடிகால் அமைச்சக துணை ஆலோசகர் பாலசுப்பிரமணியன் நேற்று காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார்.
விமான நிலையத்தில் மத்திய நிபுணர் குழு தமிழகத்தில் ஆய்வுப் பணிகள் குறித்து பாலசுப்பிரமணியன் கூறியதாவது, ‘தமிழகத்தில் ஏற்பட்டு உள்ள வறட்சியை நேரடியாக ஆய்வு செய்ய வந்து உள்ளோம். நாங்கள் சென்னை தலைமை செயலகத்தில் அரசு அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை செய்ய உள்ளோம். அதன் பின்னர் தமிழகம் முழுவதும் குழுக்களாக பிரிந்து சென்று வறட்சி பகுதிகளில் ஆய்வு மேற்கொள்வோம்.
அதன்பிறகு மீண்டும் சென்னையில் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி விட்டு டெல்லி சென்று மத்திய அரசிடம் ஆய்வு அறிக்கையை சமர்ப்பிப்போம்' என இவ்வாறு பாலசுப்பிரமணியன் கூறினார்.