உ.பி.: சிறையில் பிறந்து 19 ஆண்டுகள் கழித்து தாயை ஜாமீனில் எடுத்த மகன்
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த கன்டி பிரசாத் மனைவி விஜய குமாரி. பக்கத்து வீட்டுக் குழந்தையை கொன்று விட்ட குற்றத்திற்காக கடந்த 1994ம் ஆண்டில் அவருக்கு ஆயுள் தண்டனை கிடைத்தது. அப்போது அவர் 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். சிறையில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
அந்த குழந்தைக்கு கடவுள் கிருஷ்ணரின் பெயரான கன்ஹையா என்று பெயர் சூட்டினார். அதே ஆண்டு அவர் ஜாமீன் கோரி விண்ணப்பித்தார். அவர் ரூ. 10,000 பணத்தை கட்டிவிட்டு ஜாமீனில் செல்லலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அவரிடம் ரூ.10,000 இல்லை, அவரது குடும்பத்தார் யாரும் அந்த பணத்தை தர முன்வரவில்லை. இதனால் அவர் சிறையிலேயே வாடினார்.
கன்ஹையா லக்னோவில் உள்ள அரசுக்கு சொந்தமான சிறுவர் இல்லத்தில் வளர்ந்தார். அவர் இரண்டு வாரத்திற்கு ஒரு முறை சிறைக்கு சென்று தாயை சந்தித்து வந்தார். விஜயாவை சந்திக்க அவரது 2 சகோதரிகள், 2 சகோதரர்கள் மற்றும் கன்டி பிரசாத் உள்பட யாருமே சிறைக்கு வரவில்லை. இந்நிலையில் கன்ஹையாவுக்கு 18 வயாதனவுடன் கான்பூரில் உள்ள ஆடை தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வேலைக்கு சேர்ந்தார். தனது சம்பளத்தை சேர்த்து வைத்து தனது அம்மா விஜயாவை இந்த மாத துவக்கத்தில் ஜாமீனில் வெளியே கொண்டு வந்தார்.
இது குறித்து விஜயா கூறுகையில்,
நான் சிறையில் இருந்தபோது எனது மகளுக்கு திருமணமாகியுள்ளது. மற்றொரு மகன் நாய் கடித்து இறந்துவிட்டான். சிறையில் பிறந்த என் மகன் தான் என்னை வெளியே கொண்டு வந்தான். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு என் கணவர் என்னை சந்திக்க வந்தார். தான் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதை என்னிடம் கூறத் தான் வந்தார் என்றார்.
ஜாமீன் பணம் கட்ட முடியாததால் ஒரு பெண் 19 ஆண்டுகள் சிறையில் இருந்தது குறித்து நீதிபதிகள் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.