ஒரு பக்கம் குஜராத்தில் மோடிக்கு வெற்றி, பிகாரில் நிதிஷுக்கு பெரும் தோல்வி
பாட்னா: பிகாரில் மகாராஜ்கன்ச் லோக்சபா தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இங்கு ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி பின்தங்கிவிட்டது.
குஜராத்தில் 2 லோக்சபா மற்றும் 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தலில் முதல்வர் நரேந்திர மோடியின் பாஜக முன்னிலையில் உள்ள நிலையில், பிகாரில் முதல்வர் நதிஷ்குமாரின் கட்சி தோல்வியடைந்திருப்பது பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
மோடியை பிரதமர் வேட்பாளராக ஏற்க முடியாது என்று கூறி வருபவர் நிதிஷ் குமார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த மாநிலத்தில் ஒரு காலத்தில் கோலோச்சிய லாலு பிரசாத் யாதவுக்கு ஊடகங்கள் அரசியல் முடிவுரை எழுதிவிட்ட நிலையில், அவரது கட்சி யாரும் எதிர்பாராத வகையில் இந்தத் தேர்தலில் வெற்றியை நோக்கி நடை போட்டுக் கொண்டுள்ளது.
கடந்த ஏழரை ஆண்டுகளுக்குப் பின் முதன்முதலாக நிதிஷ்குமார் கட்சியை லாலு புரட்டி எடுத்துள்ளார்.
இந்தத் தொகுதியில் ராஷ்ட்ரீய ஜனதா தள வேட்பாளர் பிரபுநாத் சிங் 78,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் வேட்பாளர் பி.கே.சாகி தோல்வியடைந்தார்.
தனது தோல்விக்கு கூட்டணிக் கட்சியான பாஜகவினரின் உள்குத்து வேலைகளே காரணம் என்று சாகி குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து லாலு கூறுகையில், இது வெறும் செமி பைனல் தான். இதிலேயே நிதிஷ்குமாருக்கு பெருத்த அடியைத் தந்துவிட்டோம். இனி எங்கள் வெற்றி தொடரும் என்றார்.
இந்தத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் 3வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
இந்தத் தொகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடந்தது. இன்று வாக்கு எண்ணிக்கை நடந்தது.