சென்னைவாசிகளுக்கு ஒரு நற்செய்தி... நம்ம சிங்காரச் சென்னை இப்போ ‘குப்பை நகரம்’
சென்னை: தமிழகத்தின் தலைநகரமான சென்னை குப்பைகளால் நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறதாம். அதனை விரைவாக கட்டுப்படுத்தாவிடில் சென்னை குப்பை நகரமாவது உறுதி என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
சென்னை மாநகராட்சியில் மொத்தம் 200 வார்டுகள் உள்ளன. அதிலிருந்து தினந்தோறும் 4,000 மெட்ரிக் டன் குப்பை சேகரிக்கப்படுவதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்படும் இன்று, சென்னையின் குப்பை பற்றி நீங்களும் தெரிந்து கொள்ளுங்களேன்....
மலை போல் குவிந்த குப்பை...
ஆங்காங்கே மலை போல் குவிந்துள்ள குப்பைகள் சென்னை மாநகராட்சிக்கு தொடர்ந்து தீராத தலைவலியாக இருந்து வருகிறது. லட்சக்கணக்கில் செலவழித்தும் நகரை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ள முடியவில்லை என ஆதங்கத்தில் உள்ளார்கள் ஊழியர்கள்.
நோய்த்தொற்றும் அபாயம்...
பொதுமக்களுக்கு குப்பைகள் ஆங்காங்கே தேங்கி கிடப்பதால் துர்நாற்றம் வீசுவதுடன் பல்வேறு தொற்று நோய்களும் ஏற்பட வாய்ப்புள்ளது. கோடையில் குப்பை மேடுகள் தீப்படித்துக் கொண்டால் கேட்கவே வேண்டாம், அருகில் வசிப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும் ஒரே புகை மயம் தான். கொசுராக நுரையீரல் நோயும் வருகிறது.
ஷிப்ட் போட்டு குப்பை அள்றாங்களாம்...
தினமும் காலை 6.30 மணியிலிருந்து 10.30 மணி வரையும், மதியம் 2.30லிருந்து மாலை 5.30 மணி வரையும், இரவு 9லிருந்து அதிகாலை 2 மணி வரையும் என மூன்று ஷிப்ட் அடிப்படையில் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறதாக மாநகராட்சி சொல்கிறது..
குப்பை மேடு மலையாகி வருகிறது....
சேகரிக்கப்படும் குப்பைகள் கொடுங்கையூரில் 200 ஏக்கர் பரப்பரளவில் அமைந்துள்ள குப்பை கிடங்கில் 2100 மெட்ரிக் டன் முதல் 2,300 மெ.டன் வரையிலும், பெருங்குடி குப்பை கிடங்கில் 2,200 மெ.டன் முதல் 2.400 மெ.டன் வரை தினமும் கொட்டப்படுகிறது.
நவீன குப்பை மாற்று நிலையங்கள்...
மண்டலம் 4,5,6,8,9,10,13 ஆகியவற்றில் நவீன குப்பை மாற்று நிலையங்கள் 14 கோடியில் அமைக்கப்பட்டு, பின்னர் அவை முறையாக செயல்படுத்தப்படாததால் பயனற்றுப் போனது வேறு கதை. தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் குப்பைகளை விலைக்கு வாங்கும் திட்டத்திற்கும் ரிசல்ட் சரியில்லை.
மூன்று சக்கர வாகனங்கள்...
குப்பை களை சேகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் மூன்று சக்கர சைக்கிள்கள் என்பதற்காக மாநகராட்சி சார்பில், 2.800 மூன்று சக்கர சைக்கிள்களும், 448 வாகனங்களும் பயன்பாட்டில் உள்ளன. .
துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறை....
கடந்த 1978ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் நியமிக்கப்பட்ட துப்பரவு பணியாளர்களின் பணியிடங்கள் தற்போது வரை பின்பற்றப்பட்டு வருகிறது. மக்கள் தொகை எண்ணிக்கை அதிகரிப்பதற்கு ஏற்ப துப்புரவு பணியாளர்கள் பணியிடங்கள் அதிகரிக்கப்படவில்லை.
செலவே இல்லாமல் குப்பை அள்ளும் திட்டம்...
இது குறித்து கருத்து தெரிவித்த மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘தினமும் குப்பை அகற்ற லட்சக்கணக்கில் செலவிடப்படுகிறது. ஆனால் மக்கள் போதிய ஒத்துழைப்பு கொடுப்பதில்லை. துப்புரவு பணியிடங்கள் காலியாக உள்ளதால் தினக்கூலி ஊழியர்கள் மூலம் தினமும் குப்பைகள் அகற்றப்பட்டு வருகிறது. மாநகராட்சிக்கு செலவே இல்லாமல் குப்பைகளை அகற்ற புதிய திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச நிறுவனங்களின் பங்களிப்புடன் விரைவில் குப்பையை அகற்ற ஏற்பாடு நடந்து வருகிறது. இத்திட்டம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும்' என தெரிவித்தார்.