வாஜ்பாய், அத்வானி உள்ளிட்ட மூத்த பாஜக தலைவர்கள் ஓய்வு பெற வேண்டிய தருணம் இது!
கோவாவில் இன்று முதல் 3 நாட்களுக்கு பாரதிய ஜனதாவின் செயற்குழுக் கூட்டம் நடைபெறுகிறது. இன்று காலை தொடங்கிய செயற்குழுக் கூட்டத்தின் முதல் நாளில் நரேந்திர மோடி, சுஷ்மா ஸ்வராஜ், அருண்ஜேட்லி, ராஜ்நாத்சிங் உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டனர். ஆனால் கட்சியின் மூத்த தலைவர்களான வாஜ்பாய், அத்வானி, உமாபாரதி ஆகியோர் இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அனைவருக்குமே உடல்நலக் குறைவுதான் காரணமாம்.. இதில் வாஜ்பாய் நீண்டகாலமாகவே உடல் நலமில்லாமல் உள்ளார். அவர் கூட்டத்துக்கு வராதது ஏற்கத்தக்கதே.
ஒரு கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் எழுவது சகஜம்தான்..ஆனால் மூத்த தலைவர்களும் அடுத்த தலைமுறை தலைவர்களும் இணைந்து செயல்படுவதுதான் ஆரோக்கியமான போக்காக இருக்க முடியும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். இப்படி கட்சியின் மிக முக்கிய செயற்குழுக் கூட்டத்தை புறக்கணித்துக் கொண்டு குடைச்சல் கொடுப்பதைவிட அத்வானி போன்றவர்கள் தீவிர அரசியலைவிட்டு ஓய்வு பெற்றுவிடலாம் என்கின்றனர் அவர்கள்..
88 வயது வாஜ்பாய், உடல்நிலையைக் கருத்தில் கொண்டு நீண்டகாலத்துக்கு முன்பே தீவிர அரசியலைவிட்டு ஒதுங்கிக் கொண்டார். ஆனாலும் அவருக்கும் பாஜகவின் நாடாளுமன்றக் குழுவில் பல ஆண்டுகளாக ஒரு இடம் ஒதுக்கப்பட்டே வருகிறது.
இதேபோல் லோக்சபா தேர்தலில் தம்மை எப்படியும் பிரதமர் வேட்பாளராக அறிவித்துவிட மாட்டார்களா? என்ற துடிப்போடு இருக்கிறார் 85 வயது அத்வானி. இதேபோல் 79 வயது தலைவராக இருக்கிறார் முரளி மனோகர் ஜோஷி. இவர்கள் எல்லாம் ஓய்வு பெற்றுவிட்டால் சுஷ்மா ஸ்வராஜ், அருண்ஜேட்லி, ராஜ்நாத் சிங், நரேந்திர மோடி போன்ற அடுத்த தலைமுறை தலைவர்கள் பாஜகவை வழிநடத்துவது சுலபமாக இருக்கும் என்பதும் அரசியல் பார்வையாளர்களின் கருத்து.
எதிர்வரும் லோக்சபா தேர்தலில் அத்வானி ஆதரவு கோஷ்டி எப்படித்தான் எதிர்ப்பு தெரிவித்தாலும் நிச்சயமாக நரேந்திர மோடியைத்தான் பாஜக பிரதமர் வேட்பாளராக் முன் நிறுத்தப் போகிறது. மோடிக்கு கட்சியில் ஆதரவும் அதிகம்.. இதைத்தான் கோவா செயற்குழுவும் முடிவு செய்ய இருக்கிறது. கோவா செயற்குழு கூட்டம் பற்றி கருத்து தெரிவித்த பாஜக செய்தி தொடர்பாளர் ராஜிவ் பிரதாப் ரூடி, கட்சியினருக்கு கோவா செயற்குழுக் கூட்டத்தின் மூலம் மிகத் தெளிவான செய்தியை கட்சித் தலைவர் ராஜ்நாத் தெரிவிப்பார் என் எதிர்பார்க்கிறோம். இது தொடர்பாக பாஜக நாடாளுமன்ற குழு உறுப்பினர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தி வருகிறார் என்றார்.
பாரதிய ஜனதா கோவாவில் இருந்து அடுத்த தலைமுறை தலைவர்களைக் கொண்டு அதாவது மோடி, சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி ஆகியோரின் மூலம் புதிய பயணத்தைத் தொடங்கியிருக்கிறது. குஜராத் சட்டசபை தேர்தலில் மூன்று முறை வெற்றி பெற்று தமது பலத்தை நிரூபித்தவர் மோடி. சிக்கலான நேரங்களில் சுஷ்மா, ஜேட்லி ஆகியோர் பாஜக சார்பில் எதிர்கொண்டவர்கள்.. இவர்களைப் போன்ற அடுத்த தலைமுறைக்கு வழிவிட்டு 'உடல் நலம்' சரியில்லாத மூத்த தலைவர்கள் அரசியலைவிட்டு ஓய்வு பெறுவதுதான் சரியானதாகவும் இருக்க முடியும்!!