ராஜ்யசபா தேர்தல்...உச்சகட்ட குழப்பத்தில் தேமுதிக! தவியாய் தவிக்கும் திமுக!
சென்னை: எதிர்வரும் ராஜ்யசபா தேர்தல் தமிழக அரசியல் கட்சிகளை ஒரு கை பார்த்துவிட்டுத்தான் ஓயும்போல..தேர்தல் தேதி அறிவிக்கப்ப்ட்டுவிட்ட நிலையிலும் கூட தேமுதிக எந்த முடிவை எடுப்பது எனத் தெரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்து கிடக்கிறது. திமுகவோ எப்படியாவது ஒரு எம்.பி.சீட்டை பெற்றுவிடுவது என்ற தவிப்பில் இருக்கிறது.
தமிழகத்தைச் சேர்ந்த 6 ராஜ்யசபா எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிவடைவதால் வரும் 27-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு ராஜ்யசபா எம்.பியை தேர்ந்தெடுக்க 34 எம்.எல்.ஏ.க்களின் வாக்குகள் தேவை.
பிரதான எதிர்க்க்ட்சியான தேமுதிக 29 எம்.எல்.ஏக்களை கொண்டிருக்கிறது. ஆனால் இதில் 6 எம்.எல்.ஏக்கள் அதிருப்தி அணியில் ஆதரவாளர்களாகி உள்ளனர். மேலும் 6 பேர் சட்டசபையில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் வாக்களிப்பது என்பது சந்தேகமே..எஞ்சிய 17 எம்.எல்.ஏக்களை வைத்துக் கொண்டு என்ன செய்வது என குழப்பத்தில் இருக்கிறது தேமுதிக..
தேமுதிக புறக்கணிப்பா?
அதிருப்தி அணி, சஸ்பென்ட் அணி என எம்.எல்.ஏக்கள் ஆளுக்கு ஒரு திசையாய் பிரிந்து கிடக்கும் நிலையில் பேசாமல் ராஜ்யசபா தேர்தலை புறக்கணிப்பதுதான் சரியான நிலைப்பாடாக இருக்க முடியும் என்பது தேமுதிகவில் ஒரு சாரார் கருத்து. ஆனால் வலிய வந்து ஆதரவு கோரும் திமுகவை ஆதரித்தால் என்ன? என்பது மற்றொரு பிரிவு தேமுதிகவினரின் கருத்து.
திமுகவுக்கு ஆதரவா?
அதே நேரத்தில் திமுகவை ஆதரித்தால் அதிமுக கோபமடைந்து மேலும் சில பல எம்.எல்.ஏக்களை தாவ வைத்துவிடுமோ என்ற பீதியும் தேமுதிக தலைமைக்கு இருக்கிறதாம்.. இதனால் என்ன நிலைப்பாடு எடுப்பது என்பதில் ரொம்பவும் குழப்பத்தில் மூழ்கிக் கிடக்கிறதாம் தேமுதிக தலைமை.
தவிப்பில் திமுக
சட்டசபையில் தேமுதிகவுக்கு அடுத்து 23 எம்.எல்.ஏக்கள் கொண்டிருக்கும் திமுகவும் ராஜ்யசபா தேர்தலில் என்ன செய்வது என்ற தவிப்பில் இருக்கிறது. தமது மகள் கனிமொழியை எப்படியும் எம்.பி.யாக்க வேண்டும் என்று தவிக்கிறார் திமுக தலைவர் க்ருணாநிதி. இதற்காக தேமுதிக்வுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் பயனில்லாமல் போனது. இதனால் காங்கிரஸ் (5), பாமக (3) எம்.எல்.ஏக்களின் ஆதரவும் கோரப்பட்டிருக்கிறது. ஆளும் கட்சி தரப்பில் இருக்கும் தமுமுக, புதிய தமிழகம் ஆகியவற்றின் தயவையும் திமுக கோரியுள்ளதாம்.
தோற்றால் அவமானமாச்சே..
ஆனால் எதுவுமே இறுதி வடிவம் பெறாத நிலையில் திமுக தலைமையும் என்ன ஆகுமோ என்ற தவிப்பில் இருக்கிறதாம். ஏனெனில் கனிமொழியை வேட்பாளராக அறிவித்துவிட்டு கடைசியில் அவர் வெற்றி பெற முடியாமல் போனால் பெரும் அவமானமாக இருக்குமே என்பதுதானாம். இதற்காகவே கனிமொழியும் கூட லோக்சபா தேர்தலில் நிற்கிறேனே என்றும் சொல்லி வருகிறாராம்.. தமிழக அரசியலில் இரு பெரும் எதிர்கட்சிகளும் ராஜ்யசபா தேர்தலில் கையை பிசைந்து கொண்டே நிற்கின்றன!!