இலங்கை தமிழர்களுக்கு ஜெயலலிதாவால் மட்டுமே தனி ஈழத்தை பரிசளிக்க முடியும்: நாஞ்சில் அன்பழகன்
கன்னியாகுமரி: இலங்கை தமிழர்களுக்கு ஜெயலலிதாவால் மட்டுமே தனி ஈழத்தை பரிசளிக்க முடியும் என்று அதிமுக தலைமை கழக பேச்சாளரும், சினிமா இயக்குனருமான நாஞ்சில் பி.சி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
அதிமுக அரசின் சாதனை விளக்க பொதுக் கூட்டம் கன்னியாகுமரியில் நடந்தது.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக தலைமை கழக பேச்சாளரும், சினிமா இயக்குனருமான நாஞ்சில் பி.சி.அன்பழகன் பேசியதாவது,
முதல்வர் ஜெயலலிதா பல சாதனை திட்டங்களை நிறைவேற்றி தமிழகத்தை உயர்த்தியுள்ளார். ஆதிதிராவிட மாணவர்கள் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற உதவிகள், சுற்றுலா உள்கட்டமைப்பு மேம்பாடு, 65 லட்சம் மரக்கன்றுகள் நட்டு தமிழகத்தில் பசுமை புரட்சி உருவாக்கம் என்று பல்வேறு மக்கள் பணிகளில் அவர் ஈடுபடுகிறார்.
அவர் கவின் கலைக்கு பல்கலைக்கழகம் ஒன்றை அமைத்திருக்கிறார். கிராமியக் கலைகள் அவரை வாழ்த்தும். தமிழக மீனவர்களின் நலன் கருதி கச்சத்தீவை மீட்க தீவிரம் காட்டி வருகிறார். இது குறித்து சட்டசபையில் தீர்மானமும் நிறைவேற்றினார். கோவில்களில் அன்னதானம் செய்து பசியை நாடு கடத்திவிட்டார். இலங்கை தமிழர்களுக்கு தனி ஈழத்தை பரிசாக அளிக்கும் சக்தி புரட்சி தலைவிக்குத் தான் உள்ளது. அனைத்து மத மக்களும் புனிதப் பயணம் செல்ல மானியம் அளித்துள்ளார். முல்லைப் பெரியாறு உரிமையை மீட்டுள்ளார்.
சூரிய சக்தியுடன் பசுமை வீடுகள் பெற்றவர்கள் முதல்வரை வாழ்த்துகிறார்கள். கொடுப்பதற்காக பிறந்தவர்கள் 2 பேர். ஒருவர் புரட்சித் தலைவி. இன்னொருவர் புரட்சித் தலைவர்.
புரட்சித் தலைவியின் பொற்கால ஆட்சியில் ஒவ்வொரு நாளும் அட்சய திருதியை தான். மதுரையில் ரூ.100 கோடியில் தமிழ் தாய்க்கு சிலை வைப்பது சரித்திர சாதனை ஆகும். நடப்பாண்டில் 2 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்படுகிறது. அதனால் இனி காணி நிலம் இல்லாதவர்களை பாரதியாரின் பாடல்களில் தான் பார்க்க முடியும். உயர்ந்த எண்ணங்களின் ஆளுமை வடிவாக புரட்சித் தலைவி உள்ளார் என்றார்.