டெல்லியில் நரேந்திர மோடி.. தேர்தல் வியூகம் வகுக்க பாஜக பார்லிமென்ட் குழு கூட்டம்!
டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் பார்லிமென்ட் குழுக் கூட்டத்தில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி இன்று கலந்து கொள்கிறார். இக்கூட்டத்தில் சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல்களுக்கான வியூகம் வகுக்கப்பட இருக்கிறது.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கடந்த மார்ச் மாதம் பாரதிய ஜனதாக கட்சியின் பார்லிமென்ட் குழுவில் இணைத்துக் கொள்ளப்பட்டார். 6 ஆண்டுகளுக்குப் பிறகு மோடி மீண்டும் இக்குழுவில் இணைந்தார். பின்னர் கோவா செயற்குழுக் கூட்டத்தில் மோடி, பாஜகவின் தேசிய பிரசாரக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து இன்று பாரதிய ஜனதா கட்சியின் பார்லிமென்ட் குழுக் கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது. இக்குழுவில் மோடி உள்ளிட்ட 12 பேர் பங்கேற்கின்றனர். இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மோடி இன்று காலை டெல்லி வந்தடைந்தார்.
இந்த ஆண்டின் இறுதியில் சில மாநிலங்களுக்கு நடைபெற உள்ள சட்டசபை தேர்தல்கள் மற்றும் லோக்சபா தேர்தலை எதிர்கொள்வது பற்றி இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட இருக்கிறது.