என்.எல்.சி பங்கு விற்பனை: அதிகாரியை நியமிக்க 'டாட்' உத்தரவு
டெல்லி: என்.எல்.சியின் 5 சதவீதப் பங்குகளை தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கு விற்பது குறித்து செபியுடன் பேச்சுவார்த்தை நடத்த மூத்த அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும் என்று தமிழக அரசை மத்திய நிதியமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் பங்கு விலக்கல் துறை (DOD) கேட்டுக் கொண்டுள்ளது.
என்.எல்.சியின் 5 சதவிகித பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, என்எல்சி பங்கு விற்பனை முடிவை கைவிட வேண்டும் அல்லது அவற்றை தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கு விற்க வேண்டும் என்று யோசனை தெரிவித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு மூன்று முறை கடிதம் எழுதினார்.
இது தொடர்பாக, ஆலோசிக்கப்பட்டு மத்திய நிதியமைச்சகம் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது அதில் கூறப்பட்டுள்ளதாவது:
நிறுவனங்கள் பங்கேற்புத் திட்டத்தின் (ஐபிபி) கீழ், என்எல்சியின் ஐந்து சதவீதப் பங்குகளை தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் தெரிவித்திருந்த யோசனை குறித்து, செபியுடன் ஆலோசிக்கப்பட்டது. என்எல்சியின் 5 சதவீதப் பங்குகளை தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கு விற்க இயலும் என்று செபி கருத்துத் தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய நிலக்கரித் துறை, பங்கு விலக்கல் துறை, தமிழக அரசு ஆகியவற்றுடன் ஆலோசனை நடத்திய பின்னர் இறுதி முடிவு எட்டப்படும்.
எனவே, செபியுடன் பேச்சுவார்த்தை நடத்த மூத்த அதிகாரி ஒருவரை தமிழக அரசு நியமிக்க வேண்டும். பங்குகள் விற்பனையாளரின் வழிக்காட்டுதலின் அடிப்படையில், அதற்கான ஒப்பந்தம் அமையும். அதை அடிப்படையாக வைத்து, தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு பங்குகளை விற்பனை செய்வதில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
7 வது நாளாக போராட்டம்
பங்கு விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளர்கள் 7 வதுநாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் அனல் மின்நிலையத்தினை முற்றுகையிடும் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதனால் காலை முதலே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆயிரக்கணக்கான போலீசார் முதலாம் அனல் மின் நிலையம் முன்னர் குவிக்கப்பட்டிருந்தனர்.
2000 பேர் கைது
அறிவித்தபடி அனல் மின் நிலையத்தின் முதலாம் யூனிட்டை முற்றுகையிட ஏராளமான தொழிலாளர்கள் திரண்டனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட வந்த 2000க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.