இளவரசனை கொன்றுவிட்டு தற்கொலையாக சித்தரித்துவிட்டனர்: வக்கீல் ரஜினிகாந்த்
தர்மபுரி: இளவரசனை கொலை செய்துவிட்டு அதனை தற்கொலையாக சித்தரித்துவிட்டனர் என்று வழக்கறிஞர் ரஜினிகாந்த் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் ரஜினிகாந்த் கூறியதாவது:
ஜூலை 4ஆம் தேதி தர்மபுரியில் ரயில் மூலம் எந்த விபத்தோ, மரணமோ நடைபெறவில்லை. அப்படி மோதி இருந்தால் எங்களது டிரைவர்கள் நிச்சயம் அதை பதிவு செய்திருப்பார்கள். ரயில்வே டிராக் ஓரத்தில் தற்கொலை செய்யும் என்னத்துடனோ, ரயில் முன் பாயும் என்னத்துடனோ யாரும் நின்று கொண்டிருந்தால் ரயில் டிரைவர்களுக்கு அது தெரிய வந்திருக்கும் என்று தென்மேற்கு ரயில்வே மேலாளர் அனில்குமார் அகர்வால் குறிப்பிட்டுள்ளார். இதை வைத்து பார்க்கும் போது இளவரசன் கொலைதான் செய்யப்பட்டிருக்கிறார் என்பது உறுதியாகத் தெரிகிறது.
மருத்துவத்துறையை சேர்ந்தவர்கள்
சாதாரணமான கூலிப்படையினர் இந்த கொலையை செய்திருக்க முடியாது. மூளையை ஆங்காங்கே சிதறவிட்டிருப்பதை பார்க்கும்போது, மருத்துவத் துறை தொடர்பான அறிவு நிரம்ப பெற்ற யாரோதான் இந்த கொலையை செய்திருக்க முடியும் என்று சந்தேகிக்கிறோம்.
சந்தேகத்திற்கு காரணம்
தண்டவாளத்தின் ஓரத்தில் இளவரசன் இறந்து கிடந்ததை அப்பகுதியில் பணியில் இருந்த ரயில்வே டிராக்கை பார்வையிடும் ‘கீமேன்' தான் முதலில் பார்த்து சொன்னதாக தகவல்கள் பதிவாகி இருக்கிறது. எனவே, இளவரசன் மரணத்தில் எங்களுக்கு பலத்த சந்தேகம் உண்டாகி இருக்கிறது. நிச்சயமாக இது கொலை தான்.
தற்கொலையாக சித்தரிப்பு
இளவரசன் எழுதியதாக கூறப்படும் கடிதம், ஜூலை 1ஆம் தேதிக்கு முன்பே எழுதப்பட்டிருக்கிறது. இந்த கடிதம் குறித்த தகவல் தெரிந்த யாரோ இளவரசனை கொலை செய்துவிட்டு, அவரது சட்டை பாக்கெட்டில் இருந்த கடிதம் மூலம் இது தற்கொலையாக சித்தரிக்கப்படட்டும் என்று திட்டமிட்டிருக்கலாம். அல்லது இளவரசன் இறப்பதற்கு முன்பே இந்த கடிதத்தை திவ்யாவிடம் சேர்க்குமாறு யாரிடமாவது கொடுத்து அனுப்பி இருக்கலாம். அது எதிரிகள் கையில் சிக்கி, அதன்பிறகு கொலை திட்டம் தீட்டி இருக்கவும் வாய்ப்பிருக்கிறது.
எனவே இளவரசன் மரணம் குறித்து முழு விசாரணை நடத்தி உண்மையை வெளி உலகிற்கு கொண்டு வர வேண்டும் என்று கூறினார்.