உ.பி.யில் சாதி ஊர்வலங்களுக்கு தடை விதித்தது அலகாபாத் ஹைகோர்ட்!
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் சாதி ஊர்வலங்களுக்கு உடனடியாக தடை விதித்து அதிரடி தீர்ப்பை அளித்திருக்கிறது அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ கிளை.
உத்தரபிரதேசத்தில் லோக்சபா தேர்தலை முன்னிட்டு 38 தொகுதிகளில் இருக்கும் பிராமணர்களின் வாக்குகளைக் கவரும் வகையில் பிராமணர் மாநாடுகளை பகுஜன் சமாஜ் கட்சி நடத்தி முடித்துள்ளது. லக்னோவில் நடைபெற்ற மாநாடு மற்றும் பேரணியில் அக்கட்சித் தலைவர் மாயாவதி கலந்து கொண்டார். இதேபோல் சமாஜ்வாடி கட்சியும் பிராமணர்கள், பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள் மாநாட்டை நடத்தியது. பாரதிய ஜனதா கட்சியும் காங்கிரஸும் இதேபோல் சாதிய மாநாடுகளை முன்னெடுத்திருக்கின்றன.
இதைத் தொடர்ந்து வழக்கறிஞர் மோதிலால் யாதவ் என்பவர் சாதி மாநாடு, ஊர்வலங்களை தடை செய்யக் கோரி அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இம்மனு விசாரித்த நீதிபதிகள் உமாநாத் சிங், மகேந்திர தயாள் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், சாதி மாநாடுகள், ஊர்வலங்களுக்கு அதிரடியாக தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.
அத்துடன் இது தொடர்பாக மத்திய, மாநில அரசுக்கும் தேர்தல் ஆணையம், பாஜக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிகளுக்கும் கருத்து தெரிவிக்க நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வரும் 25-ந் தேதி நடைபெற உள்ளது.
கிரிமினல் எம்.எல்.ஏ, எம்.பிக்களை பதவி நீக்கம் செய்ய நேற்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ கிளை தம் பங்குக்கு ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.












Click it and Unblock the Notifications