ஆள் மாறாட்டம் செய்த சி.சுமதி.. வழக்குப் போட்டார் பி.சுமதி... மறுதேர்தலுக்கு உத்தரவு
சென்னை: சென்னையில் உள்ள கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தில் பெண் ஒருவர் ஆள் மாற்றம் செய்து வென்ற விவகாரத்தில் மறு தேர்தல் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை வட பழனியை சேர்ந்த பி.சுமதி என்பவர் சென்னை உயர் நீதி மன்றத்தில் ஒருமனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், சென்னை, வட பழனியில் உள்ள தென்சென்னை கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் நான் உறுப்பினராக உள்ளேன். இந்த சங்கத்தில் கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்த சி.சுமதி உறுப்பினராக இல்லை. ஆனால் அவர் நிர்வாக குழு உறுப்பினராக உள்ளார்.
இந்த நிலையில், எனது வீட்டு முகவரியை பயன்படுத்தி ஆள்மாறாட்டம் செய்து நிர்வாக குழுவில் சி.சுமதி உறுப்பினரானது தெரிய வந்தது. எனக்கும் அவருக்கும் ஒரே பெயர் என்பதால் அதை தவறாக பயன்படுத்தி உள்ளனர்.
மேலும், சங்கத்தின் தலைவர், துணைத் தலைவர் ஆகிய பதவிகளுக்கான தேர்தலில் சி.சுமதி பங்கேற்றுள்ளார். துணைத் தலைவர் ஆறுமுகம் என்பவரை அவர் தான் முன்மொழிந்துள்ளார்.
எனவே ஆள்மாறாட்டம் செய்து தேர்தலில் போட்டியிட்ட சி.சுமதியின் வெற்றி செல்லாது என நீதிமன்றம் அறிவிக்க வேண்டும். புதிதாக நிர்வாக குழு உறுப்பினர் தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி அரிபரந்தாமன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இல்லாத சி.சுமதி முன்மொழிந்ததன் மூலம் ஆறுமுகம் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று தீர்ப்பு கூறினார்.
மேலும், கூட்டுறவு சங்கத்தின் இயக்குனர் பதவி மற்றும் துணைத் தலைவர் பதவிக்கு இரண்டு மாத காலத்திற்குள் புதிய தேர்தல் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.