ரயில் மறியல்: 2000 என்.எல்.சி. தொழிலாளர்கள் கைது
நெய்வேலி: பங்கு விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து ரயில் மறியலில் ஈடுபட்ட என்.எல்.சி. தொழிலாளர்கள் 2 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.
என்.எல்.சி.யின் 5 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யும் மத்திய அரசின் முடிவை கண்டித்து கடந்த 3ஆம் தேதி நள்ளிரவு முதல் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட என்.எல்.சி தொழிலாளர்கள் இன்று காலையில் ரயில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.தொடர்ந்து நெய்வேலியில் பதற்றம் நிலவி வருவதால் காவலர்கள் ஏராளமானவர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை உயர் நீதிமன்ற தடையை மீறி நடக்கும் இந்த வேலை நிறுத்தப் போராட்டம் தற்போது உச்ச கட்டத்தை அடைந்துள்ளது. தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் தொடர்பாக மூன்று முறை நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்தது. வேலை நிறுத்தம் காரணமாக மின் உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.