நா லாரி எடுத்துட்டு வந்துருக்கேன்... ரூ 60 கோடிய எப்ப தாரீங்க: கலெக்டர் ஆபிசில் களேபரம் செய்த தாத்தா
திருவள்ளூர்: திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்துக்கு மினி லாரியைக் கொண்டு வந்து, தனக்கு தர வேண்டிய ரூ 60 கோடியைத் தருமாறு கூறிய தாத்தாவால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
நேற்று மதியம், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஒரு தாத்தாவும், அவருடன் நான்கு பேரும் தனியார் மினி லாரி ஒன்றில் வந்திறங்கினார்கள். லாரியில் இருந்து இறங்கிய தாத்தா நேராக கலெக்டர் ஆபிஸ் உள்ளே படு மிடுக்காக நுழைந்துள்ளார்.
பின்னர் அங்கிருந்த அதிகாரிகளிடம் நிர்வாகம் தனக்கு, ரூ 60 கோடி தர வேண்டி இருப்பதாகவும், அதனை இன்று வந்து பெற்றுக் கொள்ளுமாறு கடிதம் அனுப்பப் பட்டதாகவும் கறாராக கூறியுள்ளார். இதனைக் கேட்டு குழம்பிப் போன அதிகாரிகள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் தாத்தா விடுவதாக இல்லை.
இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரகத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார், முதியவரை அழைத்து விசாரித்துள்ளனர். விசாரணையில், அவரது பெயர் செல்வம் என்பதும், திருவள்ளூர் அருகிலுள்ள பூங்கா நகரைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது.
அதோடு, அவரது பேச்சு மற்றும் நடவடிக்கைகளில் இருந்து அவர் மனநலம் பாதிக்கப்பட்டிருப்பது போலீசாருக்குப் புரிந்தது. பின்னர் ஒருவழியாக அவரை சமாதானம் செய்து ஊருக்கு அனுப்பி வைத்தனர் போலீசார்.
(எனக்கு ஒரு டவுட்டு.... தாத்தாக்குத் தான் மனநலம் சரியில்லை, சரி... அவர் கூட வந்தாங்களே நாலு பேரு... அவங்க யாரு பாஸ். காசு தர்றேனு சொல்லவும் நம்பி கிளம்பிடுச்சுட்டாய்ங்க போல...).