இது நித்யாவின் கதை... ஏமாற்ற முயன்ற காதலனை அமைச்சர் உதவியுடன் கரம் பிடித்தார்
பண்ருட்டி: உருகி உருகி காதலித்து கரம் பிடித்த காதலனை பறி கொடுத்து விட்டுத் தவிக்கிறார் தர்மபுரி திவ்யா. ஆனால் பண்ருட்டியிலோ, காதலித்து கர்ப்பமாக்கி தன்னை ஏமாற்ற முயன்ற காதலனை அமைச்சர் மு.சி.சம்பத் உதவியுடன் கரம் பிடித்து வெற்றி கண்டுள்ளார் பண்ருட்டி நித்யா.
பண்ருட்டியை அடுத்த மேல்குமாரமங்கலத்தை சேர்ந்தவர் நித்யா. 19 வயதான இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 21 வயது பாலுவுக்கும் காதல் அரும்பியது. இருவரும் தீவிரமாக காதலித்தனர்.. அதே வேகத்தில் உடல்களும் சேர்ந்தன.
திருமணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை இப்படி நடந்துள்ளார் பாலு. இதனால் நித்யா கர்ப்பமடைந்தார். இதைத் தொடர்ந்து திருமணப் பேச்சை எடுத்தாலே தவிர்க்க ஆரம்பித்தார் பாலு. அதேசமயம், பாலு வீட்டில் அவருக்கு வேறு இடத்தில் பெண் பார்க்க ஆரம்பித்தனர். பொறுத்துப் பார்த்த நித்யா, அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
போலீஸார் கூப்பிட்டுக் கண்டித்தும் பலன் இல்லை, பாலுவின் போக்கில் மாற்றமில்லை. இந்த நிலையில் நித்யாவின் வயிற்றில் வளரும் கருவின் வயது 7 மாதமாக ஆனது.
இந்த விவகாரம் எப்படியோ அமைச்சர் மு.சி.சம்பத் காதுக்குப் போய் விட்டது. அவர் உடனே பாலுவை வரவழைத்து அறிவுரைகள் கூறிப் பேசினார். இறுதியில் பாலு மனம் இறங்கினர். நித்யாவை மணக்க சம்மதித்தார். இதையடுத்து கோவிலில் வைத்து பாலு, நித்யா திருமணம் உற்றார் உறவினர்கள் புடை சூழ நடந்தேறியது.
வயிற்றில் பிள்ளையைத் தாங்கிக் கொண்டு சந்தோஷத்துடன் பாலுவுக்கு கழுத்தை நீட்டி காதலில் வெற்றி பெற்றார் நித்யா.