ஹெட்ஃபோனில் பாட்டு கேட்பவர்களுக்கு காது அவுட்டாகிவிடும்… ஆய்வில் எச்சரிக்கை
நியூயார்க்: ஹெட்ஃபோன்களை அதிக ஒலியுடன் உபயோகிப்பதால் 4 பேரில் ஒருவருக்கு, காது செவிடாகும் ஆபத்து உள்ளது என நியூயார்க் நகர சுகாதார துறை அண்மையில் நடத்தியுள்ள கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.
இன்றைய இளைஞர்களை அதிகம் பாதிப்பது காது வலி பிரச்சினைதான். காது மூக்கு தொண்டை நிபுணர்களை சந்திக்கப் போனால் 10ல் 8 பேர் இளைஞர்களாகவும், சிறுவர்களாகவும் இருக்கின்றனர்.
காரணம் மணிக்கணக்கில் ஹெட்ஃபோன் மாட்டிக்கொண்டு பாட்டு கேட்பதுதான். யாருக்கும் தொந்தரவு கொடுக்காமல் தனக்கு மட்டுமே கேட்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஹெட்போன்களில் சத்தமாக பாடல்களை கேட்பதால் காது தொடர்பான பிரச்சினைகள் அதிகம் ஏற்படுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே ஹெட்ஃபோனில் அதிக நேரம் பாட்டு கேட்பவர்களுக்கு மூளை பாதிப்பு வரும் என்று கூறப்பட்ட நிலையில் காது செவிடு பிரச்சினையும் எச்சரிக்கை மணி அடித்துள்ளது.

எம்பி3 கேட்பவர்கள்
நியூயார்க் நகர சுகாதாரத்துறை 18 வயது முதல் 44 வயதுக்குட்பட்டவர்களிடையே கருத்துக் கணிப்பு நடத்தியது. இதில் எம்.பி 3 கேட்பதற்கு ஹெட்ஃபோன்களை (MP3 listeners) உபயோகிப்பவர்களுக்கு காது பிரச்னை வரும் ஆபத்து இரு மடங்காக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினசரி பாட்டு
36 சதவிகிதம் இளைஞர்கள் தினசரி ஹெட்போனில் பாட்டு கேட்பதாக கருத்துக் கணிப்பில் தெரிவித்துள்ளனர். இதில் 16 சதவிகிதம் பேர் 4 மணி நேரத்திற்கும் மேலாக சத்தமாக வைத்துக் கொண்டு பாடல்கள் கேட்கின்றனராம்.

காது செவிடாவதை தடுக்க
காது கேளாமையை கண்டிப்பாக தவிர்க்கலாம். தினசரி குறைந்த அளவு சத்தத்தில் பாடல் கேட்பதோடு, அடிக்கடி காதுக்கு ஓய்வு கொடுக்கவேண்டும் என்கின்றர் நிபுணர்கள்.

விழிப்புணர்வு அவசியம்
இது உலகளாவிய பிரச்னையாக உள்ளதால் இத்தகைய ஆபத்துகளை தவிர்க்க ஹெட்ஃபோன்களின் மூலம் அதிக சத்தத்துடன் இசை கேட்கும் விஷயத்தில், விழிப்புணர்ச்சியுடன் செயல்படுவது நல்லது என அந்த கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications