3 நூற்றாண்டுகள், 2 உலகப்போர்களைப் பார்த்த இங்கிலாந்தின் 115 வயதுப் பாட்டி மரணம்
லண்டன்: பாகிஸ்தானில் பிறந்து, தற்போது இங்கிலாந்தில் வாழ்ந்து வந்த சாண்ட் கவுர் பஜ்வா என்ற 115 வயது பாட்டி கடந்த வெள்ளியன்று இயற்கை எய்தினார்.
மூன்று நூற்றாண்டுகள் மற்றும் இரண்டு உலகப்போர்களைப் பார்த்த மிகவும் வயது முதிர்ந்த பெண்மணியான இவர், கடந்த வெள்ளியன்று வயோதிகத்தின் காரணமாக உயிரிழந்தார்.
சாண்ட் கவுர் பஜ்வா 1898ம் ஆண்டு ஜனவரி 1ம்தேதி தற்போது பாகிஸ்தானில் உள்ள குஜராத் பகுதியில் பிறந்தார். ஆனால், 1960ம் ஆண்டு இங்கிலாந்துக்கு குடி பெயர்ந்தார்.

இங்கிலாந்தின் பாட்டி...
பஜ்வா தான் இங்கிலாந்தின் வயது மூத்த பெண்மணி என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. உலகளவில் வயது முதிர்ந்த இரண்டாவது பெண்மணி இவர்.

சோதனை மேல் சோதனை...
16 வயதில் மணமுடிக்கப்பட்ட பஜ்வா, சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தவர். தனது மூத்த சகோதரியால் வளர்க்கப்பட்டார். நான்கு குழந்தைகளுக்கு தாயான நிலையில், மணமான ஆறு வருடங்களிலேயே பஜ்வாவின் கணவர் காலமானார்.

பேரன்களைப் பராமரிக்கும் பொறுப்பு...
1972ம் ஆண்டு இவரது மகள் எதிர்பாராவிதமாக மரணமடைந்த போது, இவருக்கு வயது 74. ஆனால், அந்த தள்ளாத வயதிலும் தனது பேரக்குழந்தைகளை எடுத்து பராமரித்து வளர்க்கத் தொடங்கினார். அதில் இரட்டைக் குழந்தைகளான பேரன்களின் வயது அப்போது 6 ஆகும்.

பாட்டி போல வருமா..?
எங்கள் பாட்டியின் உடல் மற்றும் உள்ள உறுதிதான் அவரை இத்தனை நாள் வாழ வைத்தது. அவரைப் போன்ற பெண்மணியை பார்ப்பது மிகவும் அரிது என அவரது பேரன்கள் மற்றும் கொள்ளுப் பேரன்கள் அவரைப் புகழ்ந்து பேசுகின்றனர்.

இறுதிச்சடங்கு...
தற்போது, இவருக்கு 12 பேரப்பிள்ளைகளும், 28 கொள்ளுப்பேரப்பிள்ளைகளும் உள்ளனராம். வயோதிகம் காரணமாக கடந்த வெள்ளியன்று இயற்கை எய்திய இப்பாட்டியை தற்போது 47 வயதாகும் அந்த பேரன்கள் ஒருமித்து தனது கொள்ளுப்பாட்டியின் இறுதிச்சடங்கை சிறப்பாக செய்து முடிக்கத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.

லண்டனில் இறுதி மூச்சு...
தன் மகள் மற்றும் மருமகனோடு 1966ம் ஆண்டு லண்டனில் குடியேறிய பஜ்வா தனது இறுதிமூச்சை அங்கேயே விட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications