கொலைமுயற்சி வழக்கு: விஜயகாந்த் முன்ஜாமீன் நிபந்தனை தளர்வு
முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நாகர்கோவில் நீதிமன்றத்தில் கடந்த 1ம்தேதி தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஆஜரானார். அப்போது தே.மு.தி.க. வக்கீல்களுக்கும், அரசு வக்கீல் ஞானசேகருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
இதனை தொடர்ந்து அரசு வக்கீல் ஞானசேகரன் நீதிமன்ற போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் விஜயகாந்த் மற்றும் அடையாளம் தெரிந்த பெயர் தெரியாத 5 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கேட்டு விஜயகாந்த் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை நீதிபதி, நாகர்கோவில் நீதிமன்றத்தில் விஜயகாந்த், ஆஜராகி ரூ.10 ஆயிரத்துக்கு இரு நபர் சொத்து ஜாமீன் அளித்து ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம். நீதிமன்றம் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை சென்னை தலைமை மெட்ரோபாலிட்டன் நீதிமன்றத்தில் தினமும் காலை ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து விஜயகாந்த் சார்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற உத்தரவை சென்னை மெட்ரோபாலிட்டன் நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் பெற்றுக் கொள்ளும்படி மாற்றியமைத்து உத்தரவிட வேண்டும், மெட்ரோ பாலிட்டன் நீதிமன்றத்தில் கையழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த மனு இன்று நீதிபதி மாலா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது விஜயாகாந்த் சார்பில் வக்கீல்கள் அஜ்மல் கான், காந்தி ஆகியோர் வாதாடினர்.
அதன் பின்பு நீதிபதி மாலா விஜயகாந்த் முன் ஜாமீன் நிபந்தனையை தளர்த்தி உத்தரவிட்டார்.
மதுரை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் விஜயகாந்த் ஆஜராகி முன் ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம். மேலும் போலீஸ் விசாரணைக்கு அழைக்கும்போது முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.