அடுத்த மத்திய அரசை தீர்மானிக்கப் போகும் 4 பெண் தலைவர்கள்!
டெல்லி: லோக்சபா தேர்தலில் புதிய மத்திய அரசை தீர்மானிக்கக் கூடியவர்களாக 4 பெண் தலைவர்கள் உருவெடுத்துள்ளனர் என்பதை டைம்ஸ் நவ் தொலைக்காட்சியின் கருத்துக் கணிப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பின் படி தற்போது லோக்சபா தேர்தல் நடைபெற்றால் சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என்று கூறப்படுகிறது. இருப்பினும் தெலுங்கானா விவகாரத்தில் எடுக்கும் முடிவு அக்கட்சியை சற்றே ஆறுதல்படுத்தலாம்.
பாரதிய ஜனதா கட்சிக்கும் கூட ஆட்சி அமைக்கக் கூடிய தனிப்பெரும்பான்மைக்கு மிக வெகுதூரத்திலேயே தொகுதிகள் எண்ணிக்கை இருக்கின்றன. இதனால் நிச்சயமாக உத்தேச 3வது அல்லது 4 அணிகளின் ஆதரவு இந்த இரு பெரும் கட்சிகளுக்கும் அவசியமாகிறது.
ஜெயலலிதா
இதிலும் குறிப்பாக 4 பெண் தலைவர்களின் கட்சிகள்தான் ஆட்சி அமைக்கப் போவது யார் என்பதை தீர்மானிக்கக் கூடியதாக இருக்கின்றன.
தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 29 தொகுதிகள் வரை கைப்பற்றலாம் என்கின்றன கருத்துக் கணிப்புகள்.
மம்தா பானர்ஜி
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியின் தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் 22 இடங்கள் வரை கைப்பற்றி தேசிய அளவில் மிக முக்கிய இடத்தைப் பிடிக்கலாம்.
மாயாவதி
உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் 27 தொகுதிகளைக் கைப்பற்றும் என்கிறது கருத்துக் கணிப்புகள். இந்த மூவர் தவிர இன்னொரு பெண் தலைவரும் தேசிய அரசியலில் முக்கிய பங்கு வகிக்கலாம், தேர்தலுக்குப் பின்.
விஸ்வரூப ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்
அவர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை வழிநடத்தி வரும் ஷர்மிளா ராஜசேகர ரெட்டி. இந்த கட்சிக்கு லோக்சபா தேர்தல் தற்போது நடைபெற்றால் 14 இடங்கள் கிடைக்கும் என்கிறது கருத்துக் கணிப்பு. இது பலரது புருவங்களையும் உயர்த்த வைத்துள்ளது.
தீர்மானிக்கும் சக்தி பட்டியலில் இணையும் ஷர்மிளா
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக சிறையில் இருக்கிறார். இந்த ஒன்றரை ஆண்டுகாலமாக அந்தக் கட்சியை வழிநடத்தி வருகிறார் ஷர்மிளா.
3 ஆயிரம் கிலோ மீட்டர் பாத யாத்திரை
தற்போது அவர் கட்சித் தொண்டர்களையும் பொதுமக்களையும் சந்திப்பதற்கான பாதயாத்திரையை நடத்தி வருகிறார். சுமார் 3 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை நடந்திருக்கிறார். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கை லோக்சபா தேர்தல் வரை கட்டிப் போட வேண்டிய நெருக்கடி ஷர்மிளாவிடம் இருக்கிறது. ஜெகன், ஷர்மிளாவின் தாயார் விஜயம்மா, எம்.எல்.ஏ,.வாக இருந்தாலும் அக்கட்சி தொண்டர்களிடையே ஷர்மிளாவுக்குத்தான் செம வரவேற்பு.
ஷர்மிளா தலைமையில் தேர்தல்
தொடர்ந்தும் ஜெகன் மோகன் ரெட்டி சிறையில் இருக்க நேரிட்டால் அக்கட்சியை லோக்சபா தேர்தலில் நிறுத்தி வெற்றி பெற வைக்க வேண்டிய பொறுப்பு ஷர்மிளாவுக்கு இருக்கிறது. இந்நிலையில் டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பும் தி ஹிண்டு கருத்துக் கணிப்பும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் விஸ்வரூபத்தை வெளிப்படுத்தி இருக்கிறது.
இதனால் எதிர்வரும் லோக்சபா தேர்தலில் புதிய அரசை தீர்மானிக்கக் கூடிய ஜெயலலிதா, மமதா, மாயாவதி பட்டியலில் ஷர்மிளாவும் இணைவது உறுதி.