முல்லைப் பெரியாறு அணையில் தமிழகத்துக்கு உரிமை இல்லை என்பதா?: உச்சநீதிமன்றம் கேள்வி
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தக் கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் 2006ஆம் ஆண்டு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் கேரள அரசோ, ஒரு அவசர சட்டத்தை நிறைவேற்றி உச்சநீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை.
இதைத் தொடர்ந்து மீண்டும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தது. பின்னர் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி ஆனந்த் தலைமையில் வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. அக்குழுவும் முல்லைப் பெரியாறு அணை பலமாக இருக்கிறது என்று அறிக்கை அளித்தது. இந்த அறிக்கை மீது உச்சநீதிமன்றத்தில் நீதிபதி லோதா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் முன்பு இறுதி விசாரணை நடைபெற்று வருகிறது.
கடந்த வாரம் நடைபெற்ற விசாரணையின் போது தமிழக அரசுக்கு முல்லைப் பெரியாறு அணை மீது எப்படி உரிமை உள்ளது? என்று கேள்வி எழுப்ப்பப்பட்டது. இதற்கு தமிழக அரசு சார்பில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இன்றும் உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.
அப்போது 2006-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் அதை நடைமுறைப்படுத்தாமல் இருக்க எப்படி சட்டம் இயற்றலாம்? என்று கேரள தரப்பு வழக்கறிஞரிடம் கண்டனம் தெரிவித்தனர். மேலும் கேரளா தரப்போ, முல்லைப் பெரியாறு அணை தங்களுக்கே சொந்தம், அதே நேரத்தில் தமிழகத்துக்கு நீரை திறந்துவிடுவதில் எந்த பிரச்சனையுமே இல்லை என்று வாதிட்டார்.
பிற்பகலில் நடைபெற்ற விவாதத்தின் போது, 1886ஆம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தானம் - இந்திய அரசு இடையேயான ஒப்பந்தம் நாடு விடுதலை அடைந்த பிறகு இயல்பாகவே காலாவதியாகிவிடும். தமிழகத்துக்கு முல்லைப் பெரியாறு அணை மீது எந்த உரிமையும் இல்லை என்று கேரள தரப்பில் வாதிடப்பட்டது.
ஆனால் உச்சநீதிமன்ற நீதிபதிகளோ, அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த உத்தரவிட்டும் கேரள அரசு ஏன் நிறைவேற்றவில்லை? நீதிமன்றத்தை உத்தரவை முடக்கும் வகையில் ஒரு சட்டம் நிறைவேற்றுவதா? என சராமரி கேள்வியை எழுப்பினர். மேலும் முல்லைப் பெரியாறு நீர்பிடிப்பு பகுதி தமிழகத்தில் இருப்பதால் எப்படி தமிழகத்துக்கு உரிமை இல்லை என கூற முடியும்? கேரளாவுக்கு மட்டுமே அணை சொந்தம் என்பதை நிரூபிக்க வேண்டும்? கேரளா இயற்றும் சட்டங்கள் பிற மாநிலங்களை பாதிக்கக் கூடாது என்று காட்டம் காட்டினர்.
பின்னர் நாளையும் வாதம் தொடரும் என்று நீதிபதிகள் இன்றைய விசாரணையை ஒத்திவைத்தனர்.