ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்: உளவுப்பிரிவு கூடுதல் டிஜிபி-யாக அசோக் குமார் நியமனம்
சென்னை: தமிழ்நாட்டில் நான்கு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, அரசு துணைச் செயலர் சிவசண்முக ராஜா, ஆதிதிராவிட நலத்துறை இயக்குனராகவும், அப்பதவியில் இருந்த விஜய ராஜ்குமார், தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியம் மேலாண் இயக்குனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் மற்றும் நீர் ஆதார மேலாண்மை திட்ட இயக்குனராகப் பணிபுரிந்த விபு நாயர், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இப்பணியிலிருந்த சுர்ஜித் சவுத்ரி, மத்திய அரசுப் பணிக்கு செல்கிறார். வேளாண்மைத் துறை, அரசு சிறப்பு செயலர் அசோக்ரஞ்சன் மொகந்தி, மாநில மனித உரிமை ஆணையச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐ.பி.எஸ் அதிகாரிகள்
பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபி-யாக பணியாற்றி வந்த அசோக் குமார் ஐபிஎஸ், தமிழக உளவுப் பிரிவு ஏடிஜிபி-யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அதேப்போன்று சென்னை குற்றப்பிரிவு ஏடிஜிபி-யாக பணியாற்றிய டாக்டர் பிரதீப் வி. பிலிப் ஐபிஎஸ், தற்போதைய பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபி-யான அசோக் குமார் ஐபிஎஸ்-க்கு பதிலாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை காவலர் நலத்துறை ஏடிஜிபி ஆர்.சி. குடவாலா ஐபிஎஸ், தீயணைப்புத் துறை இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதுவரை அப்பதவியை எஸ்.கே.உபாத்யாயா வகித்து வந்தார்.
சென்னை வடக்கு மண்டல ஐஜி கண்ணப்பன், உளவுப் பிரிவு ( உள்நாட்டு பாதுகாப்பு ) ஐஜி-யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதுவரை அப்பதவியில் ஆபாஷ் குமார் ஐபிஎஸ் இருந்துவந்தார்.
மேலும் முதுகளத்தூர் ஏஎஸ்பி வி. விக்ரமன் ஐபிஎஸ் கமுதி ஏஎஸ்பி-யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசின் முதன்மை செயலர் நிரஞ்சன் மார்டி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.