முப்பெரும் விழாவுக்கு செல்லும் வழியில் பலியான சமக நிர்வாகி: சரத் ஆறுதல், மனைவிக்கு அரசு வேலை
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா, கட்சி நிறுவனர் சரத்குமார் பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா சென்னை தீவுத்திடலில் நேற்று முன்தினம்(28ம் தேதி) நடந்தது. இவ்விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சமக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.
இவ்விழாவில் பங்கேற்பதற்காக தூத்துக்குடியில் இருந்து சென்ற கார் ஒன்று திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகேயுள்ள துறைமங்கலம் பகுதியில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த தூத்துக்குடி பூபால்ராயபுரத்தை சேர்ந்த குணசேகரன் (35) படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்திற்கு காரணமான கார் டிரைவர் பாண்டியனை பெரம்பலூர் போலீசார் கைது செய்தனர்.
விபத்தில் இறந்த குணசேகரன் தூத்துக்குடி மாநகர துணை செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார். இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் ஆனது. இவரது மனைவி தற்போது நான்கு மாத கர்ப்பிணியாக உள்ளார். விபத்து குறித்து தகவல் அறிந்த சமக நிர்வாகிகள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.
இந்நிலையில், விபத்தில் சமக நிர்வாகி குணசேகரன் பலியான சம்பவத்தை அறிந்த சரத்குமார் அதிர்ச்சி அடைந்தார். குணசேகரனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்திட சரத்குமார் இன்று (30ம் தேதி) தூத்துக்குடி வந்தார். சென்னையில் இருந்து இன்று காலை விமானம் மூலம் தூத்துக்குடி வந்த அவர் குணசேகரனின் வீட்டிற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
குணசேகரனின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவர் ரூ.50,000 நிதியுதவி வழங்கினார். மேலும் குணசேகரனின் மனைவி வெற்றிசெல்விக்கு அரசுவேலை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதி அளித்தார். சரத்குமாருடன், மாநில தொழிற் கூட்டமைப்பு செயலாளர் சுதாகர், தென்மண்டல செயலாளர் சுந்தர், எர்ணாவூர் நாராயணன் எம்.எல்.ஏ., நாடார் பேரவை மாவட்ட தலைவர் அற்புதராஜ், செயலாளர் கன்டிவேல் மற்றும் நிர்வாகிகள் உடன் சென்றனர். அதன் பின்னர் சரத்குமார் தென்காசி புறப்பட்டு சென்றார்.