குன்னூர் மாஜிஸ்திரேட் கைது விவகாரம்: ஹைகோர்ட்டில் திருப்பூர் எஸ்.பி. பொன்னி ஆஜர்
சென்னை: குன்னூர் மாஜிஸ்திரேட் தங்கராஜ் கைது விவகாரம் தொடர்பாக திருப்பூர் எஸ்.பி. பொன்னி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
குன்னூர் மாஜிஸ்திரேட் தங்கராஜ் மீது சப்-இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரி கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் மீது பல்லடம் போலீசார் கற்பழிப்பு, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.
மேலும், இந்த வழக்கில் கடந்த ஜூன் மாதம் 29ம் தேதி மாஜிஸ்திரேட் தங்கராஜை பல்லடம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த கைது நடவடிக்கை உச்ச நீதிமன்றம் பிறப்பித்த விதிமுறைகளை பின்பற்றாமல் நடந்துள்ளது என்று கூறி சென்னை உயர் நீதிமன்றம் தானாகவே முன்வந்து வழக்கை எடுத்துக் கொண்டது.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜேஷ்குமார் அகர்வால், நீதிபதி சத்திய நாராயணன் ஆகியோர் கொண்ட பெஞ்ச் மாஜிஸ்திரேட் தங்கராஜ் கைது நடவடிக்கையில் ஈடுபட்ட திருப்பூர் எஸ்.பி. பொன்னி, பல்லடம் டி.எஸ்.பி. சுரேஷ்குமார், உடுமலைபேட்டை டி.எஸ்.பி. பிச்சை, குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் சாந்தமூர்த்தி, பல்லடம் சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் ஆகியோர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இதனையடுத்து திருப்பூர் எஸ்.பி. பொன்னி, பல்லடம் டி.எஸ்.பி. சுரேஷ்குமார், உடுமலை பேட்டை டி.எஸ்.பி. பிச்சை, குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் சாந்தமூர்த்தி, பல்லடம் சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் ஆகியோர் நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்டதை தொடர்ந்து வழக்கு விசாரணை 2 வாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது.