நிறுத்தாம பாடறீயே... கோபத்தில் சுற்றுலாப்பயணியைக் குத்திக் கொன்ற பாடகர்கள்
பாங்காக்: தொடர்ந்து பாடிக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணியை ஆத்திரத்தில் பாடகர்கள் குத்திக் கொன்ற சம்பவத்தால், தாய்லாந்திற்குச் செல்லும் சுற்றுலாப்பயணிகளுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.
தாய்லாந்தின் கிராபி என்ற இடத்தில் உள்ளது ஆவோ நங் கடற்கரைப் பகுதி. இங்குள்ள லாங் ஹார்ன் சலூனின் கேளிக்கை விடுதியில்நடந்து கொண்டிருந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் பாடகர்கள் பாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களோடு சுற்றுலாப் பயணிகளும் இணைந்து பாடினர்.
இசையுடன் இணைந்து கொள்ளலாம், நல்ல இசை, நல்ல ஊழியர்களுடன் கேளிக்கை என்பதே அந்த விடுதியின் இணையதள விளம்பரம் ஆகும். சம்பவத்தன்று, அங்கு சுற்றுலா வந்திருந்த பாபி ரே கார்ட்டர் என்ற 51 வயது அமெரிக்கர், தனது 27 வயது மகன் ஆடமுடன் மேடையில் பாடிக் கொண்டிருந்த பாடகர்களுடன் சேர்ந்து பாடினார்.
ஒருகட்டத்தில் பாடகர்கள் ஓய்வெடுக்க விரும்பியும், பாபி விடாமல் பாடிக் கொண்டிருந்தாராம், இதனால் ஆத்திரமடைந்த பாடகர்கள் அவரது கழுத்தில் சரமாரியாக குத்தினர். இதில் பாபி பரிதாபமாகப் பலியானார். கொலையைத் தடுக்க முற்பட்ட ஆடமுக்கும் கையில் கத்திக்குத்து விழுந்தது.
குற்றவாளிகளைக் கைது செய்த போலீசார், கொலையின் பிண்ணனியில் கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்ததாக கூறியுள்ளது.