மருத்துவ நுழைவுத் தேர்வு: சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு எதிராக அரசு மறு சீராய்வு மனு தாக்கல்!
டெல்லி: மருத்துவ படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்ததற்கு எதிராக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.
இந்திய மருத்துவக் கவுன்சில் மற்றும் இந்திய பல் மருத்துவக் கவுன்சில் ஆகியன இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ பட்டப் படிப்புகளுக்கு தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வை கொண்டுவர முடிவு செய்தது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் கடந்த 18-ஆம் தேதி தீர்ப்பு கூறப்பட்டது; பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்து நீதிபதிகள் தீர்ப்பு கூறினர்.
இந்த நிலையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வற்புறுத்தி மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தை மீண்டும் அணுகுவோம் என்று கூறினார். அதன்படி இந்த தீர்ப்பை மறு சீராய்வு செய்யக்கோரி மத்திய அரசு இன்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
முன்னதாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மேல் முறையீடு செய்யக்கூடாது என தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம்
எழுதியிருந்தார் அதில், மத்திய அரசின் இந்த முடிவு தமிழகத்தின் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் மத்தியில் மீண்டும் பெரும் குழப்பத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தும் செயலாகும்.
மத்திய அமைச்சரின் இந்த அறிவிப்பு வேறுவித பாதிப்பை ஏற்படுத்தும் நிலையை உருவாக்கியுள்ளது. எனவே, மத்திய அரசு எடுக்கும் இந்த முயற்சிக்கு தமிழகம் கடுமையான எதிர்ப்பை தெரிவிப்பதாக முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.