மாமா தீவிரவாதியாக இருந்ததால் காஷ்மீர் மாணவிக்கு பாஸ்போர்ட் மறுப்பு
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த 15 வயது மாணவிக்கு அமெரிக்காவில் படிக்க ஸ்காலர்ஷிப் கிடைத்தும் அவரது மாமா தீவிரவாதியாக இருந்ததால் அவருக்கு பாஸ்போர்ட் மறுக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பட்காமில் இருக்கும் ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்து வருபவர் சுஃபைரா ஜான்(15). இந்தியா-அமெரிக்கா இளைஞர் கல்வி பரிமாற்ற திட்டத்தின் கீழ் அமெரிக்காவில் ஓராண்டு காலம் தங்கி படிப்பதற்கான ஸ்காலர்ஷிப் சுஃபைராவுக்கு கிடைத்துள்ளது. இதற்கான தேர்வில் தேர்ச்சி பெற்ற அவர் டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் நடந்த நேர்காணலிலும் கலந்து கொண்டார்.
இதையடுத்து அவர் பாஸ்போர்ட் கேட்டு கடந்த ஏப்ரல் மாதம் விண்ணப்பித்தார். அவர் பிறப்பதற்கு முன்பு அவருடைய மாமா தீவிரவாதியாக இருந்ததால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க ஜம்மு காஷ்மீர் அரசு மறுத்துவிட்டது.
இது குறித்து சுஃபைரா கூறுகையில்,
என் மாமா ஒரு காலத்தில் தீவிரவாதியாக இருந்து சரணடைந்துவிட்டார். தற்போது அவர் பிறரை போன்று சாதாரணமாக வாழ்கிறார். இதில் என் தவறு என்ன?. நான் ஒன்றும் தீவிரவாதி இல்லையே என்றார்.