காதை செவிடாக்கும் மெளனத்தைக் கலையுங்கள்.. உதயக்குமார் கோரிக்கை
இடிந்தகரை: ஹிரோஷிமா நினைவு நாளையொட்டி, இடிந்தகரையில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி நடந்த நினைவேந்தல் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நேற்று இரவு 7 மணியளவில் இந்த மெழுகுவர்த்தி நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வின்போது தமிழக முதல்வர் உள்பட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள் , மக்கள் இயக்கத் தலைவர்களுக்கு ஒரு திறந்த கடிதமும் வெளியிடப்பட்டது.
அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி. உதயகுமார் உள்ளிட்டோர் கையெழுத்துடன் கூடிய அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது...
25 வருடப் போராட்டம்
சாதாரண மக்களாகிய நாங்கள் ஆபத்தான கூடங்குளம் அணுமின் நிலையத் திட்டத்திற்கு எதிராக கடந்த 25 வருடங்களாக தொடர்ந்துப் போராடி வருகிறோம். உச்சக்கட்டப் போராட்டத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவு நாளை நெருங்கிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில், எங்களுக்காக, தமிழ் மக்களுக்காகப் போராடிவரும் தலைவர்களுக்கும், இயக்கங்களுக்கும் எங்கள் மனம் நிறைந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். தங்களிடமும், அணுசக்தி ஆதரவு நிலைப்பாடு கொண்ட தலைவர்களிடமும் இத்தருணத்தில் ஓர் அன்பான வேண்டுகோளை முன்வைக்க விரும்புகிறோம்.
உயிரும் பாதுகாப்பும் இன்றியமையாதது
தமிழக மக்கள் உயிருக்கும், பாதுகாப்புக்கும் மிகவும் இன்றியமையாத, கூடங்குளம் அணுமின் நிலையம் சம்பந்தப்பட்ட மிக மிக முக்கியமான சில தகவல்களை மத்திய அரசும், அணுசக்தித் துறையும் திட்டமிட்டு மறைக்கிறார்கள். கூடங்குளம் அணுமின் நிலைய உலைகள் 1 மற்றும் 2 பற்றிய தல ஆய்வறிக்கை (Site Evaluation Report), பாதுகாப்பு ஆய்வறிக்கை (Safety Analysis Report), மற்றும் 2008-ம் ஆண்டு ரஷ்யாவோடு இந்திய அரசு செய்து கொண்ட இழப்பீடு ஒப்பந்தம் (Inter-Governmental Agreement on Liability) போன்ற அறிக்கைகளையும், இந்திய அணுமின் கழகம், அணுசக்தி ஒழுங்காற்று வாரியம், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் போன்றவை உச்சநீதி மன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கைகளையும் உடனடியாக மக்களுக்கு வாங்கித் தர வேண்டுகிறோம்.
தரமற்ற கட்டுமானம்
இவற்றோடு கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தரமற்ற உபகரணங்களும், உதிரிப் பாகங்களும் பயன்படுத்தப்பட்டிருப்பது பற்றியும், தரமற்ற கட்டுமானம் பற்றியும், பொருளாதாரக் குற்றங்கள் பற்றியும் சார்பற்ற, ஒரு சுதந்திரமான விசாரணையும் கோருவதற்கு தங்களை அன்போடுக் கேட்டுக் கொள்கிறோம்.
கேட்டும் தரவில்லை
தல ஆய்வறிக்கை, பாதுகாப்பு ஆய்வறிக்கை போன்றவற்றை நாங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் உதவியுடன் கேட்டும் அவை தரப்படாததால், தில்லியிலுள்ள மத்திய தகவல் ஆணையத்திடம் (Central Information Commission) முறையிட்டோம். ஆணையம் ஏப்ரல் 30, 2012 தேதியிட்ட தனது தீர்ப்பில் இந்த அறிக்கைகள் மக்களோடு பகிர்ந்துகொள்ளப்பட வேண்டியவை, அமெரிக்கா, பிரிட்டன், கனடா போன்ற நாடுகளில் இணைய தளத்திலேயே இவற்றை வெளியிடுகிறார்கள் என்று அறிவுறுத்தியது.
டெல்லியில் வழக்கு
இந்திய அணுமின் கழகம் தொடர்ந்து அவ்வறிக்கைகளைத் தர மறுத்ததால், அ.எ.ம.இ. ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார் தில்லி உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார் (வழக்கு எண்: 5886/2012). விசாரணையை இழுத்தடிக்கும் நோக்கத்தோடு, அணுமின் கழகம் எதிர் வழக்கு ஒன்றும் பதிந்திருக்கிறது (வழக்கு எண்: 3353/2013). இதே அணுமின் கழகம் கூடங்குளம் 3, 4, 5, 6 உலைகளுக்கான தல ஆய்வறிக்கையை தனது இணைய தளத்தில் வெளியிட்டிருக்கிறது.
மக்களுக்கு உரிமை உள்ளது
திட்ட பாதிப்புக்குள்ளாகும் மக்கள் தங்களின் இழப்பீடு பற்றி அறிந்துகொள்வதற்கு முழு உரிமை பெற்றவர்கள். அப்படியிருக்கும்போது மத்திய அரசு இந்தத் தகவலை மக்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பவில்லையென்றால், ஏதோ முக்கியமானத் தகவலை மறைக்கிறது என்றுதான் பொருள். அணுசக்தி அமைச்சரான பிரதமர், தமிழ் மக்களுடைய உணர்வுகளைப் புறந்தள்ளி, நம் மக்கள் நலனுக்கு ஊறு விளைவிக்கிறாரோ என்ற ஐயம் எழுகிறது.
அணுஉலைகளை மூடிய தென்கொரியா
அண்மையில் தென் கொரியா நாட்டில் உள்ள 23 அணுஉலைகளில் 14 உலைகளில் தரமற்றப் பொருட்கள் பயன்படுத்தியிருப்பதை, பொருளாதாரக் குற்றங்கள் நிகழ்ந்திருப்பதைக் கண்டுபிடித்த அந்த அரசு, பல அணுஉலைகளை மூடியது, பொருட்கள் விநியோகித்தவர்களை ஆய்வுக்குள்ளாக்கியது, தரச்சான்றுகளை பரிசோதித்தது. ஆனால் இந்தியாவில் எங்களுக்கு தேசத்துரோகி பட்டம் மட்டுமே கிடைக்கிறது.
காதை செவிடாக்கும் மெளனத்தை கலையுங்கள்
பிரதமரும், அவரது அரசும், தமிழக மக்களுக்கு உண்மையானவர்களாக இருந்தால், எங்கள் கோரிக்கைளை ஏற்க வேண்டும், காதை செவிடாக்கும் தனது மவுனத்தைக் கலைத்து உடனடியாகப் பேசவேண்டும். இதற்கு தங்களால் ஆன உதவிகள் அனைத்தையும் செய்ய வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் என்று அக்கடிதத்தில், உதயக்குமார், புஷ்பராயன், மை.பா.ஜேசுராஜ், எப். ஜெயக்குமார்,
இரா. சா. முகிலன், வி. இராஜலிங்கம், பீட்டர் மில்டன் ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர்.