தமிழகத்தில் நெட்ஒர்க் அமைத்து பா.ஜ.க நிர்வாகிகளை கொல்கின்றனர்: பொன்.ராதாகிருஷ்ணன் புகார்
திண்டுக்கல்: தமிழ்நாட்டில் பாரதியஜனதா, இந்து முன்னணி நிர்வாகிகள் திட்டமிட்டே படுகொலை செய்யப்படுகின்றனர் என்று பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.
கிறிஸ்துவ-இஸ்லாமிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதைபோல இந்து மாணவர்களுக்கும் உதவித்தொகை வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அணி சார்பில் திண்டுக்கல் நகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:
பாரதிய ஜனதா மற்றும் இந்து இயக்க நிர்வாகிகள் திட்டமிட்டே கொடூரமான முறையில் கொல்லப்பட்டு வருகின்றனர். இந்த கொலைகள் திட்டமிட்டு நடைபெற்று வருகிறது. இந்த கொலைகளுக்கு சுயகாரணம் தனிப்பட்ட வெறுப்பு, பழிவாங்கும் நடவடிக்கை என்று தமிழக டி.ஜி.பி. அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். இந்த அறிக்கையை பாரதிய ஜனதா ஏற்றுக்கொள்ளாது.
இந்த இயக்க தலைவர்களின் கொலையில் ஒரு குழு மட்டும் ஈடுபடவில்லை. இது ஒரு பெரிய நெட்வொர்க் ஆகும். மதுரை, திண்டுக்கல், மேலப்பாளையம், வேலூர் என எல்லா இடங்களிலும் இந்த பயங்கரவாத குழுக்கள் பரவி இருக்கின்றன.
பயங்கரவாதம் ஒழிய வேண்டுமானால் சந்தேகப்படுகிற நபர்கள் யாராக இருந்தாலும் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும். இதுதான் சமுதாய கடமை ஆகும்.
தமிழகத்தில் பயங்கரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.பயங்கரவாதம் எந்த ரூபத்தில் வந்தாலும், நாட்டின் எந்தவொரு பகுதிகளில் பயங்கரவாதிகள் இருந்தாலும் கூண்டோடு ஒழிக்கப்படவேண்டும். இதற்கு காவல்துறைக்கு சிறப்பு அதிகாரம், பயிற்சி கொடுக்கவேண்டும்.
கடந்த 2007ம் ஆண்டு முதல் கிறிஸ்தவம், இஸ்லாமிய, சீக்கிய, புத்தம், பார்சி மதத்தை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கு கல்வி உதவித்தொகை கொடுப்பதை தவறு என்று சொல்லவில்லை. ஆனால் கல்வி கற்கும்போது பாகுபாடு பார்க்கக்கூடாது என்றுதான் சொல்கிறோம்.அவர்களுக்கு கொடுப்பதை போல அனைத்து சலுகைகளும் இந்து மாணவர்களுக்கும் கொடுக்கவேண்டும் என்றுதான் கேட்கிறோம்.
தமிழகத்தை பொறுத்த வரையில் 2 சதவீதமாக இருந்த பாரதிஅ ஜனதா கட்சியின் ஓட்டு வங்கி, தற்போது 10 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. அடுத்த மாதம் (செம்படம்பர்) கோவையில் நடைபெறுகிற இளைஞர் அணி மாநாட்டில் அகில இந்திய தலைவர் ராஜ்நாத்சிங், நரேந்திரமோடி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார்