போர்க்களமான கெய்ரோ.. ஒரே 43 போலீஸ் உட்பட 300 பேர் பலி... அவசர நிலை பிரகடனம்
கெய்ரோ: அதிபரை விடுவிக்கக் கோரி எகிப்தில் தொடர்ந்து நடந்து வரும் போராட்டங்களில் நேற்று ஒருநாளில் மட்டும் கிட்டத்தட்ட 300 பேர் பரிதாபமாகப் பலியாகியுள்ளனர்.
சில வாரங்களுக்கு முன் வரை எகிப்தின் அதிபராக இருந்து வந்தவர் மோர்சி. இவர் மக்களுக்கு எதிராகச் செயல் பட்டு வருகிறார் என இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அதனைத் தொடர்ந்து ராணுவம் அவரை ஆட்சியில் இருந்து அகற்றி, காவலில் வைத்தது.
இதனால் ஆத்திரமடைந்த மோர்சியின் ஆதரவாளார்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர் கலவரம் காரணமாக அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
கெய்ரோ போராட்டம்...
மோர்சியை மீண்டும் பதவியில் அமர்த்த கோரி தலைநகர் கெய்ரோவில் ரபா-அல்-அடாவியா என்ற முகாம் அமைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
அதிரடி ஆக்ஷன்...
தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அவர்களைக் கலைந்து செல்லும்படி பலமுறை எச்சரிக்கை விடுத்தது போலீசார். ஆனால், அவர்கள் அதற்கு செவி மடுக்காத காரணத்தால், அதிரடி ஆக்ஷனில் இறங்கியது போலீஸ்.
துப்பாக்கிச்சூடு...
கண்ணீர் புகை குண்டுகளை வீசிய போலீசாருக்கும், மோர்சி ஆதரவாளார்களுக்கும் இடையே மோதல் உருவானது. அதனைத் தொடர்ந்து போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி கலவரத்தை கட்டுப்படுத்தினர்.
போராட்டக்காரர்கள்....
இதில், இன்று காலை நிலவரப்படி சுமார் 235 போராட்டக்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், சுமார் 2 ஆயிரம் பேர் படுகாயமடைந்திருப்பதாகவும் தெரிகிறாது.
போலீசார் பலி...
மேலும், கலவரத்தில் சிக்கி 43 போலீசார் பலியாகியுள்ளதாக போலீஸ் தரப்பில் உறுதி செய்யப் பட்டுள்ளது.
போர்க்களமான கெய்ரோ...
கெய்ரோ நகரின் பல பகுதிகள் போர்க் களம் போல் காட்சியளிக்கிறது. சடலங்களின் மீது உறவினர்கள் விழுந்து கதறும் காட்சிகள் நெஞ்சை உருக்குவதாக அமைந்துள்ளது.
அவசர நிலை பிரகடனம்
எகிப்தில் தொடர்ந்து கலவரம் நீடித்துவருவதால் பலர் பலியாகியுள்ளனர். இதனையடுத்து அங்கு அவசர நிலையை பிரகடனம் செய்து அந்நாட்டு அதிபர் உத்தரவிட்டுள்ளார்.கலவரத்தால் பாதிக்கப்பட்டோர் மருத்துவனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.