கருத்து கணிப்பு: ம.பி.யில் பாஜவுக்கு லேசான பின்னடைவு! காங்கிரஸுக்கு ஏறுமுகம்!!
போபால்: மத்திய பிரதேச மாநில சட்டசபைக்கு தற்போது தேர்தல் நடைபெற்றால் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றாலும் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும் என்று இந்தியா டுடே- சி வோட்டர் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
மத்திய பிரதேச மாநில சட்டசபைக்கு டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தற்போது ஆகஸ்ட் மாதம் தேர்தல் நடைபெற்றால் அம்மாநில தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது தொடர்பாக கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.
இந்தக் கருத்துக் கணிப்பின் முடிவின் படி மொத்தமுள்ள 230 தொகுதிகளில் ஆளும் பாஜகவுக்கு 122, காங்கிரஸுக்கு 92, பகுஜன் சமாஜ் கட்சிக்கு 6, இதர கட்சிகளுக்கு 10 இடங்கள் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.
இருப்பினும் பாரதிய ஜனதா கட்சி கடந்த 2008ஆம் ஆண்டு தேர்தலில் 143 இடங்களைப் பெற்றிருந்தது. தற்போது 122 இடங்கள்தான் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த 21 இடங்களையும் காங்கிரஸ் வசமாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் காங்கிரஸுக்கு 71 இடங்கள்தான் கிடைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
யார் முதல்வர்?
யார் முதல்வர் என்ற கருத்துக் கணிப்பில் பாஜகவின் ஆளும் சிவ்ராஜ் சிங் செளகானுக்கு 57% ஆதரவும் ஜோதிராதியா சிந்தியாவுக்கு 24% ஆதரவும் இருப்பது தெரியவந்துள்ளது.
அதே நேரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் மற்றும் பாஜகவின் உமாபாரதி ஆகியோர் முதல்வராவதற்கு 3% ஆதரவுதான் இருப்பதாகவும் கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.