மதுரை சுங்கம் பள்ளிவாசலில் கேமரா... அதிருப்தியில் ஜமாத் உறுப்பினர்கள்
மதுரை: மதுரையில் உள்ள பிரபலமான சுங்கம் பள்ளி வாசல் வளாகத்திற்குள் 12 ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பது தொடர்பாக ஜமாத் உறுப்பினர்கள் பலரும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
போலீஸாரின் ஆலோசனைப்படி இந்த பள்ளிவாசலுக்குள் ரகசியக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் இதற்கு தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகமும், சுங்கம் பள்ளிவாசல் ஜமாத் உறுப்பினர்கள் பலரும் கடும் அதிருப்தியும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.
அதேசமயம், முஸ்லீம் ஐக்கிய ஜமாத், தமிழ்நாடு தௌஹீத் ஜமாத் ஆகியவை இந்த கேமரா பொருத்தலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் முஸ்லீம் சமுதாயத்தினரிடையே கருத்து பிளவு ஏற்பட்டுள்ளது.
சுங்கம் பள்ளிவாசல்
மதுரையின் பிரபலமான பள்ளிவாசல்தான் சுங்கம் ஜமாத் என்று அழைக்கப்படும் சுங்கம் பள்ளிவாசல்.
போலீஸ் பக்ருதீனால் குழப்பம்
தற்போது இந்த பள்ளிவாசல் போலீஸாரின் தீவிரக் கண்காணிப்புக்குள்ளாகியுள்ளது. காரணம், போலீஸ் பக்ருதீன்...
தலைமறைவாக இருக்கும் பக்ருதீன், பிலால் மாலிக்
பல்வேறு வழக்குகளில் போலீஸ் பக்ருதீனும், பிலால் மாலிக்கும் தேடப்பட்டு வருகின்றனர்.
இந்த மசூதிக்குத்தான் வருவார்களாம்
இருவரும் அடிக்கடி இந்த மசூதிக்கு வருவார்கள் என்று போலீஸார் கூறுகின்றனர். மேலும் நெல்பேட்டை பகுதியில்தான் சுற்றித் திரிவதாகவும் கூறப்படுகிறது.
மப்டி போலீஸ் உலா
இதன் காரணமாக இந்த மசூதிப்பக்கமும், நெல்பேட்டை பகுதியிலும் போலீஸார் மப்டி உடையில் சுற்றிக் கொண்டிருக்கின்றனராம்.
போலீஸ் ஆலோசனைப்படி கேமரா
பக்ருதீன் மற்றும் பிலால் மாலிக் மசூதிக்கு வருகிறார்களா என்பதைக் கண்காணிக்கவே மசூதிக்குள் 12 ரகசியக் கேமராக்களைப் பொருத்தியுள்ளது ஜமாத். போலீஸ் ஆலோசனைப்படியே இதைச் செய்துள்ளனராம்.
எதிர்ப்பும் - ஆதரவும்
இந்த கேமரா பொருத்தலுக்கு தமுமுக மற்றும் ஜமாத் உறுப்பினர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதேசமயம் சிலர் ஆதரவும் தெரிவித்துள்ளனர்.
ஜமாத்தின் விளக்கம்
இதுகுறித்து சுங்கம் பள்ளிவாசல் ஜமாத் செயலாளரும், ஐக்கிய ஜமாத் நிர்வாகியுமான காஜா மொஹைதீன் கூறுகையில், ஜமாத் நிர்வாகத்தில் உள்ள 11 பேரின் ஒப்புதலுடன்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதை நாங்களாகத்தான் பொருத்தியுள்ளோம். போலீஸாருக்கு, இந்த பள்ளிவாசல் தீவிரவாதிகளின் புகலிடம் அல்ல என்பதை நிரூபிக்கவே இந்த ஏற்பாடு. இதில் பதிவாகும் காட்சிகள் போலீஸாரிடம் தரப்பட மாட்டாது. மாறாக ஜமாத் நிர்வாகிகளே இதைப் பார்ப்பார்கள் என்றார்.
போலீஸாருக்கு உதவவே கேமராக்கள்...
ஆனால் பள்ளிவாசல் பொதுக்குழு உறுப்பினர்களும், வக்கீல்களுமான முகம்மது யூசுப் மற்றும் சையத் அப்துல் ஆகிய இருவரும் கருத்து தெரிவிக்கையில், போலீஸார் கொடுத்த நெருக்கடிக்கு பணிந்தே இந்த முடிவை ஜமாத் எடுத்துள்ளது. போலீஸாருக்கு உதவவே இதைச் செய்துள்ளனர் என்று குற்றம் சாட்டினர்.