நீர்மூழ்கி வெடித்துச் சிதறியதற்கு ஏவுகணைகள் வெடித்ததே காரணம்?!
மும்பை: மும்பை கடற்படைத் தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஐஎன்எஸ் சிந்துரக்சக் நீர்மூழிகிக் கப்பலில் நடந்தது தீ விபத்தா அல்லது வெடி விபத்தா அல்லது சதிச் செயலா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
இந்த நீர்மூழ்கியின் பேட்டரிகள் வைக்கும் பகுதியில் வெடிவிபத்து ஏற்பட்டது, அதைத் தொடர்ந்து ஏவுகணைகள் இருந்த பகுதியிலும் வெடி விபத்து ஏற்பட்டதாகவும், இதனால் ஏவுகணைகள் வெடித்துச் சிதறியதாகவும் தகவல்கள் வருகின்றன. ஆனால், இதை கடற்படை உறுதி செய்யவில்லை.
இந்த நீர்மூழ்கியில் இருந்த 3 அதிகாரிகள் உள்ளிட்ட 18 வீரர்களில் 5 பேரின் உடல்கள் மட்டுமே இன்று காலை வரை மீட்கப்பட்டுள்ளன. இதனால் மற்ற 13 பேரும் கூட உயிரிழந்திருக்கலாம் என்றே அஞ்சப்படுகிறது.
இந்த வெடிவிபத்தைத் தொடர்ந்து நீர்மூழ்கியே கடலுக்குள் மூழ்கிவிட்டது. இந்த நீர்மூழ்கிக்குள் கடற்படையின் டைவர்கள் சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
நீர்முழ்கியில் உள்ள நீரை வெளியேற்றி அதை மீண்டும் மிதக்கச் செய்யும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
பேட்டரிகளை சார்ஜ் செய்யும்போது வெளியாகும் ஹைட்ரஜன் வாயுயை வெளியேற்றும் கருவிகள் செயல்படாமல் போனதால், தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் இதையடுத்து நீர்மூழ்கியின் ஏவுகணைகள், கடலடி ஏவுகணைகள் (torpedoes) வெடித்துச் சிதறியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
மேலும் சம்பவம் நடந்தபோது அந்த நீர்மூழ்கியில் ஏவுகணைகள் பொறுத்தப்பட்டுக் கொண்டிருந்ததாகவும், அப்போது நடந்த ஏதோ தவறு காரணமாகவே வெடிவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் தகவல்கள் வருகின்றன.
நீர்மூழ்கியைச் சுற்றி சிதறிய ஏவுகணை பாகங்கள் கிடந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் மனிதத் தவறால் இந்த விபத்து நடந்ததா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.