உண்ணாவிரதமிருக்கக் கூட விஜய்க்கு அனுமதி மறுப்பதா?- அரசுக்கு ராமதாஸ் கண்டனம்
இது தொடர்பாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:
தலைவா திரைப்படத்தை வெளியிடுவதற்கு முட்டுக் கட்டை போடப்படுவதை எதிர்த்து நடிகர் விஜய் உண்ணாவிரதம் இருப்பதற்குக் கூட அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.
சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கவும், கொலை, கொள்ளைகளை தடுக்கவும் உருவாக்கப்பட்ட காவல் துறை முழுக்க முழுக்க எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்காகவே பயன்படுத்தப்படுகிறது. அரசின் குறைகளை சுட்டிக் காட்டும் அரசியல் கட்சித் தலைவர்கள் மீதும், அவர்களின் கருத்துக்களை வெளியிடும் ஊடகங்கள் மீதும் அவதூறு வழக்குகள் தொடரப்படுவதன் மூலம் மறைமுக மிரட்டல்கள் விடப்படுகின்றன.
இவற்றையெல்லாம் பார்க்கும்போது தமிழ் நாட்டில் ஜனநாயக ஆட்சி நடைபெறுகிறதா அல்லது சர்வாதிகார ஆட்சி நடைபெறுகிறதா? என்ற ஐயம் எழுவதை தவிர்க்க முடியவில்லை. அரசியல் கட்சிகளின் ஜனநாயக உரிமைகளை பறிக்கும் வகையில் செயல்பட்ட அரசுகள் அனைத்தும் கடந்த காலங்களில் மக்களால் தண்டிக்கப்பட்டிருக்கின்றன.
இதை உணர்ந்தாவது அடக்கு முறைகளை கைவிடுவதுடன், தருமபுரி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் நடைமுறையில் உள்ள 144 தடையாணையை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.