சித்ரவதையை தாங்க முடியல, எங்களை சுட்டு கொன்னுடுங்க: பாக். சிறையில் கதறும் 11 இந்திய கைதிகள்
பாகிஸ்தானின் லாகூரில் உள்ள கோட் லாக்பட் சிறையில் உள்ள 11 இந்திய கைதிகள் சித்வரதை வாழ்க்கையில் இருந்து விடுதலை தந்து தங்களை சுட்டுக் கொன்றுவிடுமாறு இந்திய மற்றும் பாகிஸ்தான் அரசுகளை வேண்டி எம்.பி. அவினாஷ் ராய் கன்னா மற்றும் ஊடகங்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர். குறிக்கோள், அர்த்தமில்லாத இந்த நரக வாழ்க்கையில் இருந்து விடுதலை வேண்டும் என்று கேட்டுள்ளனர்.
இந்தியில் எழுதப்பட்டுள்ள கடிதத்தில் கைதிகள் கிர்பால் சிங், குல்தீப் சிங், தரம் சிங், முகமது பரீத், திலக் ராஜ், மக்பூல் லோகே, அப்துல் மஜீத், சாம்பு நாத், சுரஜா ராம், மொஹிந்தர் சிங் மற்றும் பன்வாசி ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர். அதே சிறையில் உள்ள 4 பெண்கள் உள்பட 21 இந்திய கைதிகள் சித்ரவதை தாங்க முடியாமல் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
ராஜ்யசபா எம்.பி.யான கன்னா அந்த கடிதத்தின் ஜெராக்ஸ் காப்பிகளை ஊடகங்களுக்கு அளித்தார். மேலும் இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பப் போவதாகவும் அவர் தெரிவித்தார். பாகிஸ்தான் சிறைகளில் சுமார் 200 இந்திய கைதிகள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
லாகூரில் உள்ள கோட் லாக்பாட் சிறையில் தான் இந்திய கைதி சரப்ஜித் சிங் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.