ஆந்திர எம்.பிக்கள் 11 பேரை சஸ்பென்ட் செய்ய தீர்மானம்- கடும் அமளி - சபாநாயகர் மைக் உடைப்பு!

லோக்சபாவில் கடந்த ஒரு வார காலமாக தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திர மாநில எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலையும் சபை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. பகல் 12 மணியளவில் சபையில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கமல்நாத், சபை நடவடிக்கைக்கு இடையூறு செய்யும் 11 ஆந்திர எம்.பி.க்களை சஸ்பென்ட் செய்யும் தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.
இவர்களில் 7 பேர் காங்கிரஸ் எம்.பிக்கள், 4 பேர் தெலுங்குதேசம் கட்சி எம்.பிக்களாவர்.
இந்த தீர்மானத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தார். இந்த எதிர்ப்புகளை மீறி அந்த தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. அப்போது சபையில் கடும் அமளி ஏற்பட்டது.
சபாநாயகர் இருக்கை முன்பு கூடிய ஆந்திர எம்.பிக்கள் முழக்கங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் இந்த வாக்கெடுப்பின் மீதான தீர்ப்பை சபாநாயகர் மீராகுமார் வாசிக்க முற்பட்ட போது அவரது மைக்கை எம்.பிக்கள் தட்டிவிட்டனர்.
இதனால் அந்த மைக் உடைந்து கீழே விழுந்தது. இதைத் தொடர்ந்து சபை நடவடிக்கைகளை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக சபாநாயகர் மீராகுமார் அறிவித்தார்.












Click it and Unblock the Notifications