ஹெர்னியா ஆபரேஷன் என்ற பெயரில் பெண்ணின் கிட்னியை திருடிய டாக்டர்
தேனி: தேனிப் பெண்ணிடம் ஹெர்னியாவுக்கு அறுவை சிகிச்சை செய்வதாகக் கூறி சிறுநீரகத்தை எடுத்த மருத்துவரை போலீசார் தேடி வருகின்றனர்.
தேனியைச் சேர்ந்த 42 வயது விவசாயக் கூலிப் பெண் ஒருவர் வயிறு வலி காரணமாக சேகர் என்ற மருத்துவர் நடத்தும் தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர் உடனடியாக ஹெர்னியா அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். பின்னர் அந்த பெண்ணை கூடலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அறுவை சிகிச்சை செய்துள்ளார்.
அறுவை சிகிச்சைக்கு பிறகு வலி இருந்தாதல் அப்பெண் தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் அங்கிருந்து மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மதுரை மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கர்பப்பை வாய் புற்றுநோய் உள்ளதாக தெரிவித்தனர்.
பின்னர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவருக்கு ஸ்கேன் எடுத்துள்ளனர். அப்போது தான் அவருடைய சிறுநீரகங்களில் ஒன்று இல்லை என்று தெரிய வந்தது. யாருக்காவது சிறுநீரக தானம் செய்தீர்களா என்று மருத்துவர்கள் கேட்டதற்கு அப்பெண் ஹெர்னியாவுக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக கூறினார்.
இதையடுத்து அப்பெண்ணின் கணவர் இது குறித்து போலீசில் புகார் கொடுத்தர். போலீசார் வழக்குப் பதிவு செய்து மருத்துவர் சேகரை தேடி வருகின்றனர். போலீஸ் விசாரணையில் சேகர் படிப்பறிவில்லாத விவசாயக் கூலிகளாகப் பார்த்து அவர்களின் சிறுநீரகங்களை திருடியது தெரிய வந்தது. இந்நிலையில் சேகரை தேடி தனிப்படை போலீசார் கேரளா விரைந்துள்ளனர்.