மெட்ராஸ் கபேக்கு எதிராக சென்னையில் வீதிகளில் இறங்கி போராடிய மாணவர்கள்
சென்னை: மெட்ராஸ் கபே படத்திற்குத் தடை விதிக்கக் கோரி சென்னையில் பல்வேறு மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். சாலை மறியலிலும் அவர்கள் ஈடுபட்டனர்.
மெட்ராஸ் கபே படத்திற்கு எதிராக அரசியல் கட்சிகள், தமிழ் ஆர்வலர்கள், மாணவர்கள் என சகல தரப்பினரும் களத்தில் குதித்துள்ளனர். விடுதலைப் புலிகளை இழிவுபடுத்து்ம் இந்தப் படத்தை திரையிடக் கூடாது, தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
இந்தப் போராட்டத்தில் தற்போது மாணவர்கள் தீவிரமாக இறங்கி வருகின்றனர். பல்வேறு ஊர்களிலும் சட்ட மாணவர்கள் போராட்டத்தில் பங்கேற்க ஆரம்பித்துள்ளனர். சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் நேற்று மறியலில் ஈடுபட்டனர்.
இதனிடையே, பாலசந்தர் மாணவர் இயக்கம் மற்றும் தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பில் சுமார் 50 பேர் சென்னை மயிலாப்பூர் லஸ் கார்னரில் இன்று காலை சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
அப்போது, மெட்ராஸ் கபே படத்துக்கு எதிராக கோஷமிட்டதோடு, படத்தை வெளியிடக் கூடாது என்று முழக்கமிட்டனர். மாணவர்களின் இந்த திடீர் போராட்டத்தால் லஸ் கார்னரில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீஸார், போராட்டக்காரர்களை கைது செய்து திருமண மண்டபம் ஒன்றுக்குக் கொண்டு சென்றனர்.