விடுதலையாகிறார் ஹோஸ்னி முபாரக்: வீட்டு சிறையில் வைக்க ராணுவ கமாண்டர் உத்தரவு!

எகிப்து நாட்டில் 30 ஆண்டுகள் அதிபராக ஆட்சி செய்த ஹோஸ்னி முபாரக் (84), 2011-ம் ஆண்டில் ஏற்பட்ட மக்கள் புரட்சியால் முபாரக் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார். பின்னர் ஊழல் உள்ளிட்ட குற்றசாட்டுகளால் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஊழல் குற்றச்சாட்டின் கீழ் 2 ஆண்டுகள் வரை முபாரக் சிறையில் இருந்துள்ளார். எனினும் அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை. எனவே இறுதித் தீர்ப்பு வரும் வரை அவர் சிறையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நீதிமன்றம் கூறியுள்ளது. 2011-ல் நிகழ்ந்த 18 நாள் புரட்சியின் போது 800 பேரை கொலை செய்ததாகவும் முபாரக் மீது குற்றச்சாட்டு உள்ளது.
கெய்ரோவில் உள்ள டோரா சிறையில் உள்ள மருத்துவமனையில் முபாரக் இப்போது உள்ளார்.
அரசு தரப்பு செய்தித்தாள் நிறுவனத்திடமிருந்து 11 மில்லியன் டாலர் (சுமார் ரூ.66 கோடி) அன்பளிப்புகள் பெற்றதாக அவர் மீது ஊழல் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கில் இருந்து அவரை நீதிபதி நேற்று விடுவித்து உத்தரவிட்டார்.
இருப்பினும் அவருக்கு எதிராக மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளதால் முபாரக் 48 மணி நேரம் சிறையில் இருப்பார் என்றும் நீதிபதி கூறினார்.
இந்நிலையில் முபாரக் விடுதலை செய்யப்பட்டால், அவரை கட்டாய வீட்டுக்காவலில் வைக்க பிரதமரும், தற்போதைய ராணுவ துணை கமாண்டருமான ஹசன் எல் பெப்லாவி நேற்று மாலை உத்தரவிட்டுள்ளார்.
முபாரக்கின் வீழ்ச்சிக்குப் பின் அதிபரான மோர்ஸி ராணுவத்தால் பதவி நீக்கப்பட்டதால், பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வன்முறைக் களமாகியுள்ள எகிப்தில் முபாரக் விடுவிப்பால் பதற்றம் அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications