கடல் தாது மணல் முறைகேடு.. சிபிஐ விசாரணை கோரும் மீனவர்கள்
தூத்துக்குடி: தமிழக அரசு நியமித்துள்ள ஆய்வுக்குழு மீது நம்பிக்கை இல்லாத காரணத்தினால் கடலோர தாதுமணல் முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்தவேண்டும் என்று மீனவ ஐக்கிய முன்னணியினர் அறிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட மீனவர் ஐக்கிய முன்னணி செயலாளர் சுபாஷ் தூத்துக்குடியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், கடல்தாது மணல் அள்ளுவது தொடர்பாக கனிமவளத்துறை 116பேருக்கு உரிமம் வழங்கியுள்ளது. இதில் 98நிறுவனங்கள் வி.வி மற்றும் அதன் சார்பு நிறுவனங்களாகும். இப்படி ஒருவருக்கு மட்டும் அதிகஅளவு உரிமம் வழங்கியுள்ளதற்கான காரணம் தெரியவில்லை.
உவரி அருகேயுள்ள வெள்ளான்விளை பகுதியில் மணல்எடுப்பு நிறுவனத்தில் பணிபுரிந்த ஒருவர் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார். இப்படி கடந்த 20ஆண்டு காலமாக மணல் நிறுவனங்களில் 100க்கணக்கானவர்கள் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளனர். இந்த வழக்குகளை எல்லாம் சந்தேக மரணம் என்று காவல்துறை விசாரித்து மூடியுள்ளது. எனவே இதுகுறித்து மத்திய புலனாய்வுத்துறை விசாரணை நடத்தவேண்டும்.
மணல் அள்ளுவதற்கு அனுமதி கொடுத்துள்ள சுரங்கத்துறை ஒரு அடி ஆழத்திற்கு மேல் மணல் அள்ளக்கூடாது, கடற்கரையில் இருந்து 500மீட்டர் தொலைவிற்கு பின்புதான் அள்ளவேண்டும், இயந்திரங்கள் பயன்படுத்தக்கூடாது, மணல் அள்ளிய பகுதிகளை சமப்படுத்தவேண்டும் என்று பல்வேறு விதிமுறைகளை வகுத்துள்ளது. ஆனால் 20ஆண்டுகாலமாக இந்த விதிமுறைகள் மீறப்பட்டு வருகிறது.
முன்னாள் கலெக்டர் ஆஷிஷ்குமார் ஆய்வின்போது முறைகேடாக மணல் அள்ளியது தொடர்பாக குளத்தூர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று கூறியிருந்தார். ஆனால் இதில் காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆய்வுக்குழுவிடம் நாங்கள் எங்களது மீனவ ஐக்கிய முன்னணி சார்பில் தூத்துக்குடியை போன்று நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் ஆய்வு நடத்தவேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். ஆனால் இதில் தமிழக அரசு மவுனம் சாதித்து வருகிறது.
இதற்கிடையே, கடல்தாது மணல் முறைகேடு தொடர்பாக அரசு நியமித்த சிறப்புக் குழு விசாரணை நடத்திவரும் நிலையில், அரசியல் கட்சியினர், சமூகஆர்வலர்கள் மணல்ககொள்ளையர்களை கைது செய்யவேண்டும் வலியுறுத்தி வருகின்றனர்.
இத்தகையசூழ்நிலையில் சென்னையிலுள்ள பிரபலமான 7ஸ்டார் ஹோட்டலில் முறைகேடுக்கு ஆளான மணல் கம்பெனியை சேர்ந்த நிர்வாக இயக்குநர் ஒருவருக்கு திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் ஆளும்கட்சி பிரமுகர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். இது தற்போது நடந்துவரும் ஆய்வுக்குழுவின் அறிக்கை மற்றும் விசாரணை எப்படி இருக்கும் என்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
இதனையெல்லாம் பார்க்கும்போது அரசு நியமித்துள்ள ஆய்வுக்குழுவின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நடந்துவரும் கடல்தாதுமணல் முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டும்.
இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர், சிபிஐ தலைமை இயக்குநர், மத்திய உள்துறை செயலகம், மத்திய புலனாய்வுத்துறைக்கு மீனவ ஐக்கிய முன்னணி சார்பில் கோரிக்கை மனு அனுப்பியுள்ளோம் என்றார்.
பேட்டியின்போது, மீனவ ஐக்கிய முன்னணி மாவட்ட தலைவர் சேவியர்வாஸ், பொருளாளர் ஜாய்காஸ்ட்ரோ, நிர்வாகிகள் விஜயகுமார், ரஜீஸ், அருள், சகாயராஜா, அந்தோணிபிச்சை உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.