இலங்கை இறுதிப் போர்.. இந்தியக் கொடி பறந்த கப்பலில் இருந்தும் குண்டு வீச்சு: வவுனியா கோர்ட்டில் மனு!!
வவுனியா: தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப் போரில் முல்லைத் தீவு கடற்பரப்பில் இந்திய தேசியக் கொடியுடன் நின்ற கப்பலில் இருந்தும் பொதுமக்கள் மீது குண்டுகள் வீசப்பட்டதாக வவுனியா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை இறுதிப் போரில் அந்நாட்டு ராணுவத்திடம் சரணடைந்து காணாமல் போனவர்கள் பற்றி வவுனியா மேல்நீதிமன்றத்தில் ஏற்கெனவே 5 ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் மீது நேற்று வவுனியா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.
இந்த விசாரணையின் போது கூடுதலாக 7 மேலும் 7 ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவையும் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
இத்தகைய மனு ஒன்றில், பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த சுதந்திரபுரத்தில் நான் தங்கியிருந்தேன். அப் பகுதி மீது விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது.
அதே நேரத்தில் கடலில் நிறுத்தப்பட்டிருந்த இந்திய தேசியக் கொடி பறக்கவிடப்பட்டிருந்த கப்பல் ஒன்றிலிருந்தும் கரையில் மக்கள் இருந்த பகுதிகளை நோக்கி குண்டுகள் வீசப்பட்டன.
இறுதிப் போரில் இரசாயனக் குண்டுகளும் பயன்படுத்தப்பட்டன என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
விடுதலைப் புலிகளின் முன்னாள் திருகோணமலை அரசியல்துறை பொறுப்பாளர் எழிலன் உள்ளிட்ட 5 பேர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுக்கள் மீது பதிலளிக்க இலங்கை அரசுக்கு நேற்று கடைசி வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் இலங்கை அரசு எந்த ஒரு பதிலையும் அளிக்கவில்லை.
நேற்று நீதிமன்ற விசாரணையின் போது அடுத்த இரண்டு நாட்களில் பதில் மனுத்தாக்கல் தாக்கல் செய்யப்படும் என்று இலங்கை அரசு தெரிவித்தது. இதைத் தொடர்ந்து இந்த வழக்குகள் அடுத்த மாதம் 12ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.