ரூபாயின் தொடர் வீழ்ச்சி.... டீசல் விலை லிட்டருக்கு ரூ 5 உயர்கிறது?
டெல்லி: பாராளுமன்றக் கூட்டத் தொடருக்குப் பின் டீசல் விலை லிட்டருக்கு ரூ 5 உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவை நோக்கிப் போய்க் கொண்டிருப்பதால் வேறு வழியின்றி இந்த முடிவுக்கு அரசு வந்துள்ளது.
சமையல் கேஸ் விலையையும் இனி மாதம்தோறும் சிலிண்டருக்கு ரூ 10 வீதம் உயர்த்தவும் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

வரலாறு காணாத சரிவு
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. நேற்று ரூ 66 ஆக இருந்தது இன்று 68 ஐத் தொட்டுவிட்டது.

நிதிப் பற்றாக்குறை
ரூபாய் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருவதால் நடப்பு கணக்கு பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. பங்குச் சந்தையும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. இதனால் இந்திய பொருளாதாரம் சீர் குலைந்துள்ளது.

வீழ்ச்சியைத் தடுப்பார்களா...
ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை சரி செய்வதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது என மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில் தெரிவித்தார். முதல் கட்டமாக, பல புதிய முதலீடுகளை வரவழைக்க நடவடிக்கை எடுத்துள்ளது அரசு. மேலும் ஏற்கெனவே நிறுத்தப்பட்டிருந்த பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைச் செயல்படுத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதியைக் குறைக்க...
ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் உள்நாட்டு இறக்குமதி அதிகரிப்புதான். இதனைக் கணிசமாகக் குறைக்க வேண்டும் என அரசு அறிவித்து பல்வேறு புதிய வரிகளை விதிக்க ஆரம்பித்துள்ளது. இருந்தாலும் ரூபாய் மதிப்பு கட்டுக்குள் வரவில்லை.

எரிபொருள் விலை உயர்வு
நடப்பு கணக்கு பற்றாக்குறை, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, நிதிப்பற்றாக்குறை ஆகிய முப்பெரும் பாதிப்பிலிருந்து நாட்டை ஓரளவாவது மீட்பதற்கு உடனடி வழி, பெட்ரோலிய பொருட்கள் விலையை கணிசமாக உயர்த்துவதுதான் என மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மழைக்கால கூட்டத் தொடரில்
அந்த வகையில், முதலில் பெட்ரோலிய பொருட்களில் அதிகளவு பயன்படுத்தப்படுகிற டீசல் விலையை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. டீசல் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்த அது பரிசீலித்து வருகிறது. பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வருகிற 6-ந் தேதி முடிகிறது. அதற்கு பின்னர் இதுகுறித்து மத்திய அரசு முடிவு எடுத்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிய வந்துள்ளது.

எரிவாயு விலை
சமையல் கேஸ் சிலிண்டர் விலையை மாதம்தோறும் ரூ.10 உயர்த்துவது குறித்தும் மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications