‘சர்வதேச குழந்தைகளின் அமைதி பரிசு’ பெறும் மலாலா
லண்டன்: பெண் கல்விக்காக தொடர்ந்து போராடி வரும் மலாலாவுக்கு நெதர்லாந்து நாடு, சர்வதேச குழந்தைகளின் அமைதிக்கான உயரிய பரிசு ஒன்றை அளித்து கவுரவிக்க இருக்கிறது.
தாலிபான்களால் சுடப்பட்டு, உயிருக்கு போராடி உயிர் பிழைத்த பாகிஸ்தான் மாணவியான மலாலா அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாமல் தொடர்ந்து பெண் கல்விக்காக குரல் கொடுத்து வருகிறார்.
தற்போது, லண்டனில் உள்ள 'வெஸ்ட் மிட்லேண்ட்ஸ்' என்ற இடத்தில் குடும்பத்தோடு வசித்து வரும் மலாலாவிற்கு நெதர்லாந்தில் உள்ல கிட்ஸ் ரைட்ஸ் அமைப்பு சர்வதேச குழந்தைகளுக்கான அமைதிப் பரிசை வழங்க உள்ளது.
தாலிபன்களின் தாக்குதல்....
உலக பெண் கல்வியை ஊக்குவித்த காரணத்திற்காக பாகிஸ்தான் மாணவியான 15 வயது மலாலா, தாலிபன்களால் கடந்த அக்டோபர் மாதம் 9ம் தேதி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுடப்பட்டார்.
இலவச சிகிச்சை...
தலை உள்பட பல இடங்களில் குண்டுபாய்ந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவ ஆஸ்பத்திரியில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அவருக்கு இலவச உயர்சிகிச்சை அளிக்கமுன் வந்தது இங்கிலாந்து அரசு.
தீவிர சிகிச்சை....
தனி விமானம் மூலம் லண்டனில் உள்ள ராணி எலிசபத் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார் மலாலா. அங்கு அவருக்கு 3 ஆபரேஷன்கள் மற்றும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
மிச்சமுள்ள ஆபரேஷன்கள்....
உடல் நலம் தேறிய பின், மலாலா கடந்த மாதம் ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினார். இன்னும் அவருக்கு சில ஆபரேஷன்கள் செய்யப்பட வேண்டி இருப்பதாகவும், அவற்றை சிரிது காலம் சென்று செய்து கொள்ளலாம் எனவும் மருத்துவர்கள் அறிவுரை கூறியுள்ளனர்.
லண்டன்வாசியான மலாலா....
எனவே, அவர் தொடர்ந்து லண்டனிலேயே தக்கி சிகிச்சை பெறும் வகையில் ஏற்பாடு செய்து கொடுத்தார் பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி. மேலும், லண்டன் பள்ளியில் தனது கல்வியைத் தொடர மலாலாவிற்கும், அவரது அப்பாவிற்கு லண்டனிலேயே பணி ஏற்பாடும் செய்யப்பட்டது.
அமைதி விருது....
இந்நிலையில், நெத்ர்லாந்தில் ஆம்ஸ்டர்டாம் நகரில் இயங்கி வரும் ‘கிட்ஸ் ரைட்ஸ்' என்ற குழந்தைகள் உரிமைகளுக்கான அமைப்பு, மலாலாவிற்கு ‘சர்வதேச குழந்தைகளுக்கான அமைதிப் பரிசு' வழங்க இருக்கிறது.
உயிரை பணயம் வைத்து போராடியவர்....
இது குறித்து கிட்ஸ் ரைட்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் 'தனது உயிரை பணயம் வைத்து உலகில் உள்ள பெண் குழந்தைகள் கல்வியறிவை பெறும் உரிமைக்காக போராடியவர், மலாலா. 2013ம் ஆண்டுக்கான சர்வதேச குழந்தைகளுக்கான அமைதி பரிசை மலாலாவுக்கு வழங்குவதன் மூலம் குழந்தைகளின் உரிமைக்காக சிறப்பு அர்ப்பணிப்புடன் போராடிய இந்த வீரமும், திறமையும் வாய்ந்த சிறுமியின் மீது கிட்ஸ் ரைட்ஸ் இயக்கம் ஒளி வெள்ளத்தை பாய்ச்சுகிறது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய அதிபர் தொடங்கி வைத்த விருது....
டச்சு நாட்டில் துவங்கப்பட்ட கிட்ஸ் ரைட்ஸ் இயக்கத்தின் சார்பில் சர்வதேச அமைதி பரிசு வழங்கும் திட்டம், கடந்த 2005ம் ஆண்டு ரோம் நகரில் நடைபெற்ற நோபல் பரிசாளர்கள் மாநாட்டின் போது ரஷ்ய நாட்டின் முன்னாள் அதிபர் மிக்கய்ல் கோர்பச்சேவ்வால் தொடங்கி வைக்கப் பட்டது.
14.5 லட்ச ரூபாயும், சான்றிதழும்...
இந்திய மதிப்பில் சுமார் 14.5லட்ச ரூபாயும், சான்றிதழும் தெற்கு ஹாலந்தின் தலைநகர் ஹாக் நகரில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் விழாவில் மலாலாவிற்கு வழங்கப்பட இருக்கிறது.
தவக்கோல் கர்மன் வழங்குகிறார்....
மலாலாவிற்கு இந்த விருது, ஏமன் நாட்டின் பெண்ணுரிமை போராளியும், பத்திரிகையாளரும், அரசியல்வாதியும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான தவக்கோல் கர்மன் கைகளால் வழக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.