20 நாட்களாக ‘சிலுவையில் அறைந்து’ போராடும் 8 பராகுவே பேருந்து ஊழியர்கள்
அசுன்சியான்: பணி நீக்கம் செய்யப்பட்ட தங்களுக்கு மீண்டும் பணி வழக்க வேண்டும் எனக் கூறி, கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தங்களைத் தாங்களே சிலுவையில் அறைந்து போராடி வருகின்றனர் பராகுவேயைச் சேர்ந்த 8 ஊழியர்கள்.
பராகுவே நாட்டின் தலைநகர் அசன்சியானில் செயல்பட்டு வரும் வேன்கார்டியா என்ற பேருந்து நிறுவனத்தின் ஊழியர்கள் கூடுதல் நேர பணிக்கான ஊதியம், மருத்துவப்படி,ஓய்வூதியம் வழங்க வேண்டி அதன் நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.
அவர்களில் 8 ஊழியர்களை அதிரடியாக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது பேருந்து நிறுவனம். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பணி நீக்கம் செய்யப்பட்ட அந்த ஊழியர்கள் கடந்த 20 நாட்களாக தங்களை தாங்களே சிலுவையில் அறைந்துக்கொண்டு கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டத்தில் ஊழியரின் மனைவி ஒருவரும் பங்கெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
போராட்டத்தின் விளைவாக பணி நீக்கம் செய்யப் பட்டவர்களில் 5 பேரை மட்டும் மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ள சம்மதம் தெரிவித்துள்ள நிர்வாகம், மீதமுள்ள 3 பேரை பணியில் சேர்த்துக் கொள்ள மறுத்து விட்டது.
அனைவரையும் மீண்டும் பணியில் அமர்த்தும் வரை தங்கள் போராட்டம் வாபஸ் இல்லை எனத் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர் ஊழியர்கள்.