சொத்து குவிப்பு வழக்கு- அரசு வழக்கறிஞரை திரும்பப் பெற தடை கோரி ஜெ. மனு- சுப்ரீம் கோர்ட் மறுப்பு!
டெல்லி: தம் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் பவானிசிங்கை கர்நாடகா அரசு திடீரென திரும்பப் பெற்றதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. அதே நேரத்தில் இந்த வழக்கில் புதிய அரசு வழக்கறிஞரை நியமிக்கவும் உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
1991-96ஆம் ஆண்டு முதல் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்தார் என்பது வழக்கு. இந்த வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோர் சேர்க்கப்பட்டுள்ளார். பெங்களூரில் பல்வேறு முட்டுக்கட்டைகளைத் தாண்டி இந்த வழக்கின் இறுதி விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் திடீரென திமுக இந்த வழக்கில் தம்மையும் இணைத்துக் கொள்ள அனுமதி கோரியது. இதற்கு பெங்களூர் நீதிமன்றம் அனுமதி அளித்தது. பின்னர் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில், இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் பவானிசிங்கை நீக்கக் கோரி திமுக மனுத்தாக்கல் செய்தது. இந்த மனு மீது பதிலளிக்க கர்நாடகா அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதனிடையே வழக்கறிஞர் பவானிசிங்கை கர்நாடகா அரசு திரும்பப் பெற்றுக் கொண்டு உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா மனுத்தாக்கல் செய்தார்.
இம் மனு நீதிபதிகள் டி.எஸ்.சவுகான், எஸ்.ஜெ.பாப்டே ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. ஜெயலலிதா தரப்பில் வழக்கறிஞர் யு.யு.லலித் ஆஜராகி வாதாடினார். அப்போது, நீதிபதி பாலகிருஷ்ணா வரும் செப்டம்பர் மாதம் ஓய்வு பெற இருக்கும் நிலையில், அரசு வழக்கறிஞரை மாற்றியிருப்பது சரியல்ல. இந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரினார்.
ஆனால் இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், அரசு தரப்பு வழக்கறிஞரை மாற்றும் உத்தரவுக்கு தடைவிதிக்க முடியாது. பவானிசிங் மாற்றம் தொடர்பாக கர்நாடக மாநிலத் தலைமை நீதிபதியுடன், அரசு ஏதேனும் ஒருவகையில் ஆலோசனை நடத்தியிருக்கக் கூடும். அது உங்களுக்கு தெரியாமல் இருந்திருக்கலாம் என்று கூறிய நீதிபதிகள், இது எப்படி தீர்ப்பை பாதிக்கும். சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்கும் நீதிபதி ஓய்வு பெறுவது குறித்து கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பார்த்துக்கொள்வார். அதுபற்றி நீங்கள் ஒன்றும் கவலைப்படதேவையில்லை என்றனர்.
அத்துடன் சொத்துக் குவிப்பு வழக்கில் புதிய அரசு வழக்கறிஞரை நியமிக்க இடைக்கால தடை உத்தரவையும் நீதிபதிகள் பிறப்பித்துள்ளனர்.
மேலும் இந்த வழக்கில் திமுக பொதுச்செயலர் பேராசிரியர் க.அன்பழகனையும் சேர்த்துக்கொள்ள அனுமதி அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கின் விசாரணை வரும் செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.