மோடி பாஜகவை விட்டு விலகட்டும்.. அவர் பிரதமராக நான் ஆதரிக்கிறேன்- அன்னா
நியூயார்க்: நரேந்திர மோடி பாஜகவிலிருந்து விலகட்டும். அவர் பிரதமராக நான் முதல் ஆளாக ஆரவு தருகிறேன் என்று கூறியுள்ளார் அன்னா ஹஸாரே.
அமெரிக்கா சென்றிருந்தபோது, அவரிடம் மோடியை ஆதரிப்பீர்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு இப்படிப் பதிலளித்துள்ளார் அன்னா.
எனது ஆதரவு கிடைக்க வேண்டும் என்றால் மோடிமுதலில் பாஜகவை விட்டு விலக வேண்டும் என்று பதிலளித்தாராம் அன்னா. அப்படி இல்லாவிட்டால் எனது ஆதரவு கிடைக்காது என்றும் அவர் கூறினாராம்.
டெலவரே கூட்டம்
டெலவரே நகரில் ஆகஸ்ட் 20ம் தேதி நடந்த இந்திய அமெரிக்கர்களுடனான சந்திப்பி்ல் அன்னா கலந்து கொண்டார். அப்போது அவரிடம் பல கேள்விகளைக் கேட்டனர் இந்தியர்கள்.
மோடியை ஆதரிப்பீர்களா...
எனக்கு அரசியல் கட்சிகள் மீது நம்பிக்கை இல்ல. மோடி பாஜகவில் உறுப்பினராக உள்ளார். பாஜக ஒரு அரசியல் கட்சி. எனவே என்னால் ஒரு கட்சியைச் சேர்ந்தவரை ஆதரிக்க முடியாது.
ஊழலுக்குக் காரணம் கட்சிகளே
நான் ஏன் அரசியல் கட்சிகளை ஆதரிப்பதில்லை என்றால், அவர்கள்தான் நாட்டில் நிலவும் ஊழல்களுக்கு மூல காரணம். எனவேதான் கட்சிகளை நான் ஆதரிப்பதில்லை.
தனிநபராக ஆதரிக்காலமே..
மோடியை தனி நபராக ஆதரிப்பது குறித்து இப்போது கூற முடியாது. காரணம் அவர் ஒரு கட்சியில் இருக்கிறார். அவர் முதலில் பாஜகவிலிருந்து வரட்டும். அப்போது நான் அவரை சந்தோஷமாக ஆதரிப்பேன்.
இந்தியா கிளம்பினார்
தனது அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு புதன்கிழமையன்று இந்தியாவுக்குக் கிளம்பி விட்டார் அன்னா ஹஸாரே என்பது குறிப்பிடத்தக்கது.