பிரதமர் உரையில் ஒரு வார்த்தை அவைக் குறிப்பில் இருந்து நீக்கம்!
டெல்லி: பொருளாதார நிலைமை குறித்து நாடாளுமன்ற ராஜ்யசபாவில் பிரதமர் மன்மோகன்சிங் ஆற்றிய உரையில் ஒரு வார்த்தையை நீக்குவதாக துணைத் தலைவர் குரியன் அறிவித்துள்ளார்.
ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, பொருளாதார நிலைமை குறித்து நேற்று ராஜ்யசபாவில் பிரதமர் மன்மோகன்சிங் விளக்கம் அளித்தார். அவரது விளக்கம் திருப்தி அளிக்கவில்லை என்று கூறி பாரதிய ஜனதா உறுப்பினர்கள் பிரதமருக்கு எதிராக முழக்கமிட்டனர்.
அப்போது பாஜகவினரை விமர்சித்த பிரதமர் மன்மோகன்சிங், எந்த நாட்டிலாவது பிரதமரை திருடன் என்று கூறியதுண்டா? என்று குற்றம் சாட்டினார். எதிர்க்கட்சி தலைவர் அருண் ஜெட்லியும் பதிலுக்கு எந்த நாட்டிலாவது ஒரு பிரதமர் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதற்காக வாக்குகளை விலைக்கு வாங்கியதுண்டா? என்று பதிலடி கொடுத்தார்.
இந்நிலையில், ராஜ்யசபாவில் பிரதமர் ஆற்றிய உரையில் ஒரு வார்த்தை அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது என்றும் அருண் ஜெட்லியின் பேச்சில் இருந்து 3 வார்த்தைகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டன என்று துணைத் தலைவர் குரியன் தெரிவித்துள்ளார். இவை நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் என்பதால் நீக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
பொதுவாக எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பேச்சுகள்தான் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படும்.. ஆனால் நாட்டின் பிரதமரின் பேச்சே அவைக் குறிப்பில் இருந்து தற்போது நீக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.